சுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் போட்டி: காதுகளில் இனித்த தேவாரம் , திருவாசகம், திருக்குறள்
சென்னை: தென்னாடுடைய ஈசன், எந்நாட்டுக்கும் இறைவன். என்றாலும், அவன் சுவிட்சர்லாந்த் நாட்டில் கோயில் கொண்டதன் காரணம், தமிழ் மணம். ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில், தமிழ் மொழி பரவ ஆரம்பித்ததன் விளைவாகத்தான் ஈசனுக்கு இங்கே ஒரு கோயில் எழுந்திருக்கிறது.
ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் பிரதோஷ காலத்தில் விசேஷ பூஜைகள் தவறாமல் நடைபெறுகின்றன. எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தைச் சார்ந்தே நடத்துகின்றனர். மார்கழி மாதத்தில் குளிரையும் பொருட்படுத்தாது, திருப்பாவையும் திருவெம்பாவையும் ஓதப்படுகிறது. அதனையொட்டி மாணிக்க வாசகப்பெருமான் வீதியுலா வருவது சிறம்பம்சம்.
தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் தமிழர்தம் கடவுளுக்கும் கோயில்கள் இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டிலும் தென் இந்தியப் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மறந்துவிடாமல், நம் மக்கள் கடைப்பிடிப்பது பெருமையாகவும் நெகிழவைப்பதாகவும் இருக்கிறது. தமிழ் மக்களுக்காக 'சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு' சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 12. 06. 2016 பேர்ன் மாநிலத்தில் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் இனிதே நடந்து முடிந்தது.
சைவநெறிக்கூடாம்
காலமற்ற தோன்றாப் பெருமையன் 'ஞானலிங்கேச்சுரன்' சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது.
தமிழ்ப் பணி திருத்தொண்டு
பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமான் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது.
சைவமும் தமிழும்
இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான 'சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு' சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு நடுவகங்களில் நடைபெற ஏற்பாடாகி, ஜெனீவா, வலே மாநிலத்தில் மர்த்தினி போட்டிகள் இனிதே நடந்தேறியிருந்தன.
எங்கும் ஒலிக்கும் தமிழ்
12. 06. 2016 பேர்ன் மாநிலத்தில் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் இனிதே நடந்து முடிந்தது. போட்டிகள் காலை 09.30 மணிமுதல் ஆரம்பமாகி மாலை 15.00 மணிக்கு நிறைவுற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் பங்கெடுத்து சேக்கிழார் பெருமான் மீட்டளித்த தேவார, திருவாசக அருட்பாடல்களை மீட்டனர். எதிர்வரும் 19. 06. 2016 சுவிற்சர்லாந்து வோ மாநிலத்தில் லவுசான் எனும் நகரில் சைவமும் தமிழும் நடைபெறவுள்ளது.
திருப்புகழும் திருக்குறளும்
திருப்புகழும் திருக்குறளும் தமிழ் செல்வங்கள் ஓதி இனிய சைவமும் தமிழும் சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் கமழ்ந்தது. இறை திருவுருவங்களுக்கு திருவர்ணம் தீட்டும் போட்டியும் நடைபெற்றது. அனைத்துப் பிள்ளைகளும் விருப்புடன் பங்கெடுத்தனர்.
நம்நாட்டு சுவையான உணவு
நண்பகல் உணவு தாயகத்துச் சுவையுடன் அனைவருக்கும் திருக்கோவில் நல்கையாக அளிக்கப்பட்டது. இளந்தமிழ்ச்சமூகத்திற்கு எமது மொழியும் பண்பாடும் நிகரொத்து ஒருங்கே வழங்கும் நிகழ்வாக இது ஒளிர்ந்தது. பிள்ளைகும் பெற்றோர்களும் மகிழ்வுடன் ஞாயிறவன் திருநாளைக் சைவத் தமிழுடன் கழித்தனர்.