முதலில் கல்வி விருது, இப்போது ஷார்ஜா அரசின் விருது: கலக்கும் தமிழக மாணவர்
ஷார்ஜா: ஷார்ஜா கல்வி மண்டலம் மற்றும் ஷார்ஜா அரசின் பீஆ எனப்படும் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் 'ஷார்ஜா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது' ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹுமைத் ஹபிப் அபுபக்கர் என்ற தமிழக மாணவருக்கு 05.06.2014 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதுடன் பத்தாயிரம் திர்ஹமும், கண்ணாடியிலான நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விருதினை பீஆ நிறுவன தலைமை செயல் அலுவலர் காலித் அல் ஹுராய்மெல் வழங்கினார்.

ஹுமைத் ஹபிப் ஷார்ஜா அவர் ஓன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கிரீன் குளோப் எனும் சுற்றுச்சூழல் அமைப்பினை ஏற்படுத்தி பள்ளி மற்றும் இதர இடங்களிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவ்விருதுக்கு விண்ணப்பித்த 33 மாணவர்களில் மூவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவ்விருது சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் மாணவர்கள் பங்கு, சுற்றுச்சூழல் குறித்த அறிவு, உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல் உள்ளிட்டவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்படுகிறது

இவ்விருதினைப் பெற்ற முதல் தமிழ் மாணவர் ஹுமைத் ஹபிப் அபுபக்கர் ஆவார். இவர் சமிபத்தில் அமீரகத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் கல்வி விருது' வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அபுபக்கர் - யாஸ்மின் தம்பதியரின் மூத்த மகன் ஹுமைத். இவரது தந்தை அமீரக தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார்.
விருது பெற்ற ஹுமைத் ஹபீப் அபுபக்கருக்கு துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications