பகை நாடு பாகிஸ்தான் கூடச் செய்யாத பாதகத்தை 'நட்பு நாடு' இலங்கை செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

-கவிஞர் மகுடேசுவரன்

'நேசனல் ஜியாகிரபி' தொலைக்காட்சியில் எல்லைப் பாதுகாப்புப் படைப்பணிகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி. ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பினார்கள். எல்லைப் பாதுகாப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது, அப்படையினரின் பணிகள் ஆகியன அந்நிகழ்ச்சியின் பொருள்கள்.

பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லையோரத்தில் பாதுகாப்புப் படையினர் செய்யும் பணிகளைப் பற்றி விளக்குகிறது அப்படம்.

Why friendly state Srilanka attackson Indian Tamils?

பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் புறங்களில் நெடுகவே கம்பி வேலியமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நம் எல்லையோரப் பஞ்சாபுச் சிங்குகளின் விளைநிலங்கள் பாகிஸ்தான் நாட்டுக்குள் இருக்கின்றன. அவர்கள் சென்று வருவதற்கென்றே எல்லை வேலிகளில் வாயிற்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லையோரத்தில் கண்காணிக்கும் படை அலுவலரிடம் தமது மண்ணகழ் பொருள்களையும் தம்மையும் காட்டிச் சோதனைக்குட்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தமது விளைநிலத்திற்குள் செல்கிறார் சிங்கு. மாலையில் வேலை முடித்துத் திரும்புகிறார். ஒரு தகராறும் இல்லை. அதாவது நம் நாட்டுக் குடிமகனார்க்குப் பாகிஸ்தானில் விளைநிலம் இருக்கிறது. இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் மண்ணில் கோதுமை விளைவித்து எடுத்து வரக்கூடிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏதோ சிறப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

நம் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான திரிபுராவைச் சுற்றி மூன்று திசைகளிலும் வங்காள தேசம்தான் இருக்கிறது. அப்படியொரு கொடுக்கு வளைவுக்குள் அம்மாநிலம் அமைந்திருக்கிறது. திரிபுரா மாநில மக்களுக்கும் வங்காள தேசத்தினர்க்கும் இடையே எளிய போக்குவரத்து நிகழ்கிறது. இருதரப்பினரும் ஆடுமாடு விற்பனையிலிருந்து சந்தைப் பொருள்கள் விற்பதுவரை இயல்பாக மேற்கொள்கிறார்கள். இதற்கு எந்தக் கண்காணிப்பும் சட்ட வரையறையும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகடந்த மக்கள் பொருளாதாரமாக அந்நடவடிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி திரிபுரா மாநிலத்தினர்க்கும் வங்காள தேசத்தில் உள்ளவர்க்கும் இடையில் மணவினைகள் நிகழ்கின்றன. எல்லையோரத்தை அம்மக்கள் எளிய சோதனைகள் மூலம் கடக்கிறார்கள். அவர்களை அரசுகளின் எந்தக் கட்டுப்பாடுகளும் தடுத்து நிறுத்தமாட்டா. அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையூறு நேராதபடி அரசுகள் இணக்கப் போக்கினை மேற்கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் சட்டம்போட்டுத் தடுக்கக்கூடிய நிலையில் அம்மக்களும் இல்லை.

Why friendly state Srilanka attackson Indian Tamils?

பாகிஸ்தானையொட்டிய எல்லைப்புறத்தில் கம்பி வேலிகள் இருக்கின்றன என்று சொன்னேன் இல்லையா? அதற்கு மாறாக, வங்காள தேசத்தையொட்டிய மேற்கு வங்காள மாநிலத்து எல்லையோரங்களில் எவ்வித வேலியமைப்பும் இல்லை. வெறும் எல்லைக்கற்கள்தாம் நடப்பட்டிருக்கின்றன. அதனால் இந்திய எல்லைக்குள் வங்காள தேசத்தினர் எப்போதும் மிக எளிதாக வந்து செல்கிறார்கள் என்றே தெரிகிறது.

அதையும் மீறி எல்லை கடக்கும் வங்காளதேசத்தவருள் ஓரிருவர் நம் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக்கொள்கிறார். அவர்களை நம்மவர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாக்காமல் வெறுமனே பிடித்து மாப்பிள்ளையைப்போல் அமர வைத்துக்கொள்கிறார்கள். பிறகு, வாரமொருமுறையோ மாதம் ஒருமுறையோ தெரியவில்லை, இருதேசத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரும் 'கொடியணிவகுப்பு' நடத்துகிறார்கள். அப்போது இருதரப்பினராலும் அவ்வாறு எல்லை கடக்கையில் பிடிக்கப்பட்ட குடிமக்கள் அந்தந்த நாட்டுப் படையினரிடம் முறையாக ஒப்படைக்கப்படுகிறார்கள். அவ்விழா முடிவில் இருதரப்புப் படை அதிகாரிகளும் கைகுலுக்கிக்கொள்கிறார்கள். நம் நாடு பிற அண்டை நாட்டினரின் எல்லை தாண்டுதலை இவ்வாறு அன்பாக அரவணைத்து வைத்திருக்கிறது. அவ்வாறே நம்மவரின் தாண்டுதல்களும் அவர்களால் அவ்வாறே முறைமைப்படுத்தப்பட்டுள்ளன.

Why friendly state Srilanka attackson Indian Tamils?

இதேபோன்ற அண்டை நாடுதான் இலங்கையும். இத்தனைக்கும் பாகிஸ்தான் நமது நட்பு நாடு என்றுகூடச் சொல்வதற்கில்லை. இலங்கை என்னும் நாடு இந்தியாவின் பல்வேறு உதவிகளைப் பெறுகின்ற நாடு. அந்நாடு புவியியல் அடிப்படையில் இந்தியாவைப் பேரளவு சார்ந்திருக்கிறது. கடலுக்குள் வழிதவறியோ, பிழைப்பின் பொருட்டு மீன்பாடு வேண்டியோ செல்லும் நம்மக்களை 'எல்லை தாண்டுகிறார்கள்' என்ற பொய்யைச் சொல்லிச் சுட்டுக் கொன்றபடி இருக்கிறது. இலங்க மீனவர்க்கு எல்லை தாண்ட வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்குக் கிழக்கே வரம்பற்ற கடல் இருக்கிறது. ஆனால், இந்திய மீனவர்களின் வழியில்தான் கடலுக்குள்ளே குறுக்காக இலங்கைத் தீவு படுத்திருக்கிறது.

Why friendly state Srilanka attackson Indian Tamils?

எல்லை தாண்டியவர்களைப் பிடித்துச் சென்று கொடியணிவகுப்பு நடத்தி ஒப்படைக்க வேண்டியதுதானே ? அதை ஏன் இவர்கள் செய்வதில்லை என்பது விளங்கவில்லை. மிக எளிதான அரசு நடைமுறை இது. அதைச் செய்யாமல் மதிப்பான உயிர்களைத் தின்னக் கொடுக்கின்ற நிலையில் இன்னும் நாம் இருப்பது ஏன்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+