இயற்கையின் மீது ஒரு வழக்கு- அப்பாச்சி
இடம்: ஆண்டவன் நீதீமன்றம்
வாதி : மக்கள்
பிரதிவாதி: கடல் தாய்
நீதிபதி: ஆண்டவன்
வாதி :
ஆண்டவா
கொடுமை கேட்டீரா?
கொடுமை பார்த்தீரா?
கடல் தாய்,
எங்கள் வளர்ப்புத்தாய்.
தன் மடியில் தங்க வைத்து
தாராளமாய் உணவளித்து
ஓயாது தாலாட்டுப் பாடி
ஒரு நாள் மட்டும்
ஒப்பாரியிட்டது ஏனோ?
எங்கு போய் நான் தேட
சிதறி போன உறவுகளை .....
என்ன சொல்லி தேற்றிவிட
பிள்ளகளை இழந்த பெற்றோரை .....
எப்படி தான் காப்பாற்ற
தாய் இழந்த சேய்களை.....
புரிகிறது....
ஏழை மக்கள் தானே
என்ன சாதித்துவிட போகிறான்???
எதற்குச் சிரமப்படவேண்டும்?
என்று
வாய்க்கரிசி போட்டாளோ
எங்கள் வளர்ப்புத்தாய் ???
பிரதிவாதி :
தாய்மைக்குரிய
தகுதி இழந்து
தத்தளிக்கிறேன்...
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கம்
யாரை குற்றம் சொல்லி
குமுறி நான் அழ...
. சுனாமி சூரனை
கட்டுப்படுத்த கைகள் தராத
கடவுளை குற்றம் சொல்லவா ....
எதிர்த்துப் போராடாது
இழுத்த இழுப்புக்கு
இரையான ஈரநெஞ்சங்களை
குற்றம் சொல்லவா ....
வளர்த்த தாயே
வாரிசுகளை வாரித்தின்ற
கதை கேட்டீரா???
இந்த பாவம் கரைய
எந்த நீரில் நான் கழுவ
குழந்தை போல் அழுகிறேன்
யாருக்குத் தெரியும்
கொடுமை பார்த்தீரா?
என் கண்ணீரும் தண்ணீரே....
தீர்ப்பு:
உடைந்து போனது
உற்ற துணைதான்
உனக்கு நீதான் உறுதுணை..
தனிமை பட்ட பிள்ளை செல்வங்களே
தாய்கள் பல ஆயிரம் உனக்கிருக்கு...
நீங்கள் இருப்பது ஈரநிலத்தில்
கவலைப்படாதே
உதவிகள் குவியும்
புது உறவுகள் துவங்கும்...
கடல் தாயே
ஓய்ந்து விடு...
நீ வளர்க்க ஆயிரம் சேய் இருக்கு..
இயற்கை வன்முறை ஒடுக்க
பொடா கொண்டு வருகிறேன்.....