மெளன அஞ்சலி
புதுக்கவிதை எழுத்தாளர்களில் ஜெயபாஸ்கரன் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். இஸங்கள் பேசிக்கொண்டு, யாருக்கும் புரியாத கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில், தனதுஅனுபவங்களை எளிய தமிழ் நடையில் அழுத்தம் திருத்தமான கவிதைகளாக மாற்றித் தருபவர்.
இவரது கவிதைகளைப் படிக்கும் எவருக்கும், அட இது எனது வாழ்வில் நடந்ததே என்ற நெருக்கத்தைஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், இவரது கவிதைக்குரிய கரு அன்றாட வாழ்வின் சகல கூறுகளிலும் பரவிநிற்கிறது. இதோ அத்தகைய கவிதைகளில் ஒன்று.
மெளன அஞ்சலி
எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.
இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்.
இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த
முரணுமில்லை எனக்கு.
ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.
கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை.
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்.
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.
ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.