2014ல் உன்னுடன் ஒரு நாள்
உன் உச்சி நெற்றியில்
நிரந்தரமாய் பூத்திருக்கும் குங்குமம்-, நீ
குளிக்கும்போதும் கலைய மறுத்து
அடம்பிடிக்கும்..
உச்சந்தலையில் பொட்டில்லாத
முகம் பற்றி யோசித்திருந்து
இன்னொருமுறை கற்பனைக்கெட்டாமல்
தோற்றிருப்பேன்...
காதோரம் ஒன்றிரண்டு
நரைமுடிகள் கவிதை சொல்லும்
அநுபவ கோடுகளை அழிப்பதில்
உடன்பாடில்லாத உனக்கு -அவை
கூடுதல் அழகை கூட்டியிருக்கும்...
எனக்கு பிடித்த சமையல்
எனக்கு பிடித்த பலகாரங்களென
அன்றைய விருந்தோம்பல்
என்னை நோக்கியதாகவே இருக்கும்...
உனக்குள்ளும்..எனக்குள்ளும்
கடந்தகால நினைவலைகள்
வந்துபோனாலும்...உனக்கு
பறிமாற மட்டுமே நேரம் இருக்கும்...
குடும்ப வேலைப்பளுவும்
நேரமும் காலமும் -என்னை
போவென்று சொன்னாலும்... நீ மட்டும்
இன்னும் சில நாழி இருந்து செல்லென்பதை
சொல்லாமல் சொல்வாய்...
அடுத்து என்று காண்போம் என்று
அல்லலுறும் மனதின் ஆதங்கம் அது...
வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு
கணவரும் குழந்தைகளும்
வீட்டுக்குள் சென்றுவிட
நானுன் பார்வையைவிட்டு மறையும்வரை
பாதையை பார்த்திருப்பாய்...
என்ன தவம் செய்துவிட்டோம்
இப்படியொரு நட்பினை நான் பெறவென்று
உனக்கு மட்டுமல்ல எனக்கும்கூட தோன்றியிருக்கும்...
தூரத்தில் சென்ற நான் -உன் இல்லம் நோக்கி
திரும்பி பார்ப்பேன்...வாசலில்
தெய்வமாய் நீமட்டும் நின்றிருப்பாய்...
ஏனோ எனக்கு உன் வீடுமட்டும்
கோயிலென தெரிந்திருக்கும்...
ஆம் அவரவர் மொழிகளில்
தெய்வம், கோயில் என்பதற்கு
வெவ்வேறு அர்த்தம் இருக்கும்
எனக்கு உன் அன்பு தான்...எல்லாமே...!!
- சாந்தி மனோகரன் ([email protected])












Click it and Unblock the Notifications