விகார எண்ணம்
சாபம் கனத்த சாமத்தில்
சாத்தானின் புணர்தலில்
வித்தாய் என்னுள் வீழ்ந்த
ராட்சதக் கருவே!
என் உதிரம் குடித்து
மாமிசம் புசித்து வளர்ந்த பின்னும்
என்ன வேண்டும் ..
இப்படி ஒலமிடுகிறாய்?
வெள்ளைப்பாலாய் வெளியே
ஊரார்க்கு ஒழுகவிட்டு.
உள்ளே மட்டும் எனக்கு
கறுப்புக் காடியாய்
கசிகிறாய்?
முப்பத்திரு முரசுகளும்
ஒரு கம்புமாய் நீ
சுழற்றி வாசிக்கும்
தனிவர்த்தனம்
சகிக்கமுடியவில்லை.
என்ன வேண்டும் உனக்கு?
எனது உள்ளில் வேர்களைப் பரப்பி
உயிரை உறிஞ்சிப் பின் வாயிலெடுத்து
வாழும் வரம் தருகிறாய்
கூடிய என்னையே குதறி விழுங்கும்
கறுப்பு விதவையே..
எத்தனை முறையோ பிறந்து,
உன் உணவாகி இறந்து
பின்னும் பிறந்து மீண்டும் உணவாகிறேன்
ஸ்வயங்களின் உள்மண்டபத்தில்
இக்குரூர சிற்பி நக உளி கொண்டு
மூளிச் சிலைகளைச் செதுக்குகையில்...
முகக்கரையில் அதிர்வலைகள்.
உற்றுக்கவனித்தேன்
எல்லாருக்கும் என்போலவே
கறுப்புக் கர்ப்பங்கள்.
ஊதிய வயிறு இடிக்க,
கால் அகட்டி மூச்சுமுட்ட உள்ளே
நடந்தாலும், வெளியே மலடியாகவே
காட்டிக்கொள்ளூம் நடிப்புப் பத்தினிகள்
இங்கு எத்தனை பேர்?.
கருக்கலைப்பு பாவமாம்.
மருத்துவர் யாரும் தயாராய் இல்லை
மருத்துவச்சிகளும் துணைக்கு இல்லை.
தீர்மானித்துவிட்டேன்.
என்னுள் நானேயிறங்கி
உன்னைக் கலைப்பதென்று
உன்னை வெளிக்கொணரும் வேளையில்
ஊரார் முன் வேசியாவேன்..
இருப்பினும். பின்னாளில்
சத்திய சோதனை செய்த காந்தியோ
இல்லை மானுடம் பாடிய மற்றொரு கிப்ரானோவென
உலகம் எனை அதிசயிக்கும்..












Click it and Unblock the Notifications