எங்களை உருக்குலைய வைத்த சுனாமியே!
ஆண்டாண்டுக் காலமாய்
ஒத்திகை பார்த்து
அசுர வேகத்தில் எங்கள்
உசிரைக் கவர்ந்து விட்டாய்!
அரங்கேற்றம் நடத்தி விட்டாய்!
நீ அநியாயம் புரிந்து விட்டாய்
சாதிவெறிக்கும் மதவெறிக்கும்
பாடம் புகட்டவா ஒரே குழியில்
உடல்களைப் புதைத்தாய்?
உயிர்களை அழித்தாய்!
ஏ சமுத்திர ராஜனே!
உன் அதிரடி அலைகள்
செய்த அடாவடிக் கொலைகள்
பார்த்தாயா?
உன் திரவக் கைகள் செய்த
திராவகக் கொலைகளைப் பார்த்தாயா?
இது உடற்கொள்ளை அடித்த
கடற்கொள்ளையா?
உப்பு மணலில்
இரத்த வாடை அடிக்கிறது!
எங்கள் உடல்களைத் தின்றுவிட்டு
ஒப்பாரி வைக்கின்றாயே!
பூனை போல வந்து
புலி போலப் பாய்ந்து
பூகம்பம் நடத்தி விட்டாய்
கண் மூடும் நேரத்திற்கெல்லாம்
உயிர்களை மண்மூடி
மாய்த்து விட்டாயே!
அகத்தியரே கடல் நீரைக்
கமண்டலத்தில் அடைத்திட வாரும்
பாற்கடலைக் கடைந்த
பரமனே வாரும்
இந்தப் பாவிக் கடலைக்
கடைந்திட வாரும்!
பணக்குவியலைப் போல இந்தப்
பிணக்குவியலைப் பார்த்தாயா?
இத்தனை உடலங்களைத்
தின்றதற்குப் பெயர் நிலநடுக்கமா?
ஐயோ இது அடுக்குமா?
சமுத்திரத் தாயே
உங்கள் கடல் மீன்களை
நாங்கள் கவர்ந்ததற்கா
எங்கள் உடல் மீன்களைக்
கவர்ந்து சென்றாயா?
ஓ இயற்கையே!
சுனாமி என்ற பினாமி மூலம்
கடற்கரை நிலங்களைக்
கவர்ந்து சென்றாயே!
நிலத்தைத் திருடவந்த நீ
உயிர்க் குலத்தைத்
திருட வந்ததேன்?
சுறா மீனாய் வந்த சுனாமியே
திசைகளை அழித்த தீவிரவாதியே
உன்னிடம் உப்பிருக்கிறது
நன்றியில்லையே?
நெய்தல் நிலங்களைக்
கொய்து கொண்டாயே
கடற்கரைப் பூக்களைக்
கவர்ந்து சென்றாயே
ஐயோ!
பாடை கட்ட ஆள் இல்லை
பறையடிக்க காலமில்லை
ஊரையே அழித்து விட்டாயே
ஒப்பாரி வைக்க விட்டாயே!