இன்று புதிதாய் பிறந்தேன்
இன்று புதிதாய் பிறந்தேன்!
ஆம் நான் இன்று புதிதாய் பிறந்தேன்!!
நான் ஒரு குப்பைத்தொட்டி!
இன்று புதிதாய் பிறந்தேன்!!
எங்கோ ஒரு எழையின் கையில்
நான் புதிதாய் பிறந்தேன்!
கையில் பிறந்ததால் நான் உயிரற்றவன்!!
மற்ற உயிர்களைப் போல்
வயிற்றில் பிறக்க ஆசைதான்.!
நான் இன்று புதிதாய் பிறந்தேன்!!
மாநகராட்சி என்னை தத்தெடுத்தது!
ஆசைதான் மாடமாளிகையில் வசிக்க!
வீசியது என்னை தெருக்கோடியில்!
ஆம் நான் இன்று புதிதாய் பிறந்தேன்!!
எங்கோ செல்ல நினைத்த சிறுவன்
தேடி வந்தான் என்னருகில்!
உச்சி குளிர்ந்தேன்
என்னையும் தேடி ஒரு சிறுவன்!
உச்சி குளிர்ந்த எனக்கோ
வெந்நீர்க் குளியல்!!
சிறுநீர் கழித்த சிறுவன்
சிட்டாய்ப் பறந்தான்.
இதற்காகவா
என்னையும் தேடி ஒரு சிறுவன்?
அடுத்து கண்ணில் தெரிந்தது
ஒரு இளம் ஜோடி.
ஆணின் கையில் ஒரு காகிதம் - அது
நான்காய் மடிக்கப்பட்ட கடிதம்
திணித்தான் பெண்ணின் கையில்
வந்தான் திணித்தான் சென்றான்!
அனங்கவள் வந்தாள் என்னருகில்
பிரித்தாள் படித்தாள் கசக்கினாள்!
வீசப்பட்டது கடிதம் என்னிடம்
நான் ஒரு குப்பைத்தொட்டி!
கசங்கிய காகிதம் - அதில்
கசங்காத முதல் வரிகள்
நீயின்றி நானில்லை.
வெந்நீர்க் குளியலுக்குப் பின்
அனங்கவள் வீசிய காகிதத்தால்
நான் ஒரு கவிதைப் பெட்டகமானேன்!
இன்று புதிதாய் பிறந்தேன்!!
என் தலை சற்றே கனத்தது.
அஹா! நான் கவிதைப் பெட்டகமல்லவா!!
நிமிர்ந்து பார்த்தேன்
மனிதன் என்னை மிதித்துக் கொண்டிருந்தான்!
மிதிவண்டியில் ஒரு கால்
என் தலையில் ஒரு கால்
என்னை உருவாக்கியவன் ஏழை!
ஏழையின் தோற்றத்தில் அவன்!
கையில் ஒரு உணவுப் பொட்டலம்!
பிரித்தான் தின்றான் வீசினான்
என்னிடம் மீதத்தை!!
பாவம் உப்பு கரித்ததாம்!
எனக்கு கரிக்கவில்லை!!
நான் உயிரற்றவன்!!!
நான் புதிதாய் பிறந்தேன்!
பழையதாகிக் கொண்டிருக்கிறேன்!
என்னைப் புதியதாய் பார்த்தவர்கள்
நாளை பழையதாய் பார்ப்பார்கள்!
நான் புதிதாய் பிறந்தது - கனவு!
பழையதாகிக் போனது - நிஜம்!!
-ச. முத்துக்குமார் ([email protected])