கதறியழும் பதுங்குகுழிகள் ..
-வசீகரன்
நிலங்களை விழுங்கும்
சிங்கத்தின் திறந்த வாய்க்குள்
எறும்புகள் போல் நுழைந்து
போர்முகங்கள்
தற்கொலை செய்கிறது
ஒருவேளை கஞ்சிக்காய்
உயிர் சுமக்கும் கோப்பையில்
உச்ச துன்பங்களை அணைத்தபடி
உறங்கும் எலும்புக் கூடுகள்
தொண்டு நிறுவனங்களும்
எட்டாத தூரத்தில்
தொலைந்து போனது
எலும்புக் கூடுகளில்
பட்டினிப் பதாகைகள்
ஏந்தியபடி காலில்லாத
கைகள் அசைகிறது
அழித்து அழித்து
ஆனா எழுதிய மண்ணில்
உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர் இழந்து கிடக்கிறது
கண்ணீர் வெடித்துச் சிதறியபடி
"ஐயோ அறுவான்கள்
பல்குழல் அடிக்கிறாங்கள்"
மௌனக் குரல்கள் கொதிக்கிறது
வல்லினம் மெல்லினம்
இடையினம்
எல்லாம் வேடிக்கை பார்க்க
பீரங்கிகள் வாய்திறந்து
பிசாசுகள் போலவே
குண்டுகளைத் துப்புகிறது
நீலக் கடல் எழுந்து
குருதியில் தோய்ந்து குளிக்க
நீந்திப் போகிறது
சிங்கத்தின் பற்களில்
சிக்கிக் கிழிந்த மீன்கள்
எறிகணை வீச்சில்
தலைகள் பறக்க
விமானக் குண்டு வீச்சில்
விரல்கள் பறக்க
வானம் இடிந்து விழுகிறது
மரணத்தின் வாடையில்
உலாவும் மூச்சுக்காற்றை
பொசுபத்து வெப்பம் தின்ன
சாம்பல் பறக்கிறது
ஒரு கூட்டில் இழவு நடந்தால்
ஊரே கூடி ஒப்பாரி வைக்கும்
ஊரே இழவாய் வீழ்ந்தால்
ஒரு கூடு என்ன செய்யும்?
-வசீகரன், நார்வே ([email protected])