அன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி!
பேய்க்கரும்பில் துயில் கொண்டுள்ள அறிவுச்சிங்கமே!
பாரினில் அன்பு இதயங்களை ஈர்த்துக்கொண்ட பாரதத்துத் தங்கமே!
மிகமிக சாமானிய குடும்பத்தில் பிறந்து வாழ்வில் பெரும் உயரம் தொட்ட பின்னும்
அறிவு செல்வத்தை மட்டுமே சேர்த்து வைத்த விந்தை மனிதர் நீங்கள்!
ராமேஸ்வரம் தந்த மாமேதை, மஹான், மாமனிதர் நீங்கள்...
இந்நாட்டின் உயிராம் மானந்தனை போரில் துகிலுரிய விரோத நாடுகள் நினைக்கையில்
கிருஷ்ணனாய் ஏவுகணைகள் தந்து காப்பாற்றி பெருமை உயர்த்தினீர்கள்
தாய் நாட்டின் சேவைக்கு கர்ணனாய் தன் அனைத்தையும் ஈந்திட்டீர்கள்.
அன்பைத் தவிர உம்மிடம் எவரும் எதையும் கண்டதில்லை
அறிவைத் தவிர வேறெதுவும் பெரிதென உம் பேச்சில் உணர்த்தவில்லை
சீரிய சிந்தனை மூலமே எதையும் சாதிக்க முடியும் என்று
சிறு பிள்ளைகளையும் சிந்திக்கத் தூண்டியுள்ளீர்கள்..
நல்லிணக்கமும் நற்சிந்தனையுமே கொள்கையென கொண்டவர் நீங்கள்
உயர் பதவியில் இருந்திட்டாலும் எளிமையே தவமாய் கொண்டு
நல்மொழிகள் பலவும் வளரும் பருவத்தினருக்கும்
இளைஞர்களுக்கும் அருள் மொழியாய் மொழிந்திட்டீர்கள்..
இக்காலத்தில் மிகச்சொற்பமாய் இருக்கும் உண்மை மனிதர்களில்
எங்களுக்கு கிடைத்த அரிதிற்கும் அரிய பொக்கிஷம் நீங்கள்
உங்களையும் இழந்து இன்று நாங்கள் அறிவார்ந்த தலைமை இன்றியே
பல்வேறு வாழ்வாதாரப் பிரச்னைகளையும் சந்தித்து அல்லல்படுகிறோம்!
வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியர்கள் பெருமை கொள்கிறோம்
நாட்டின் இன, மொழி, தட்பவெப்பம் கலாச்சாரத்தில் மட்டுமல்ல..
இவை அனைத்தும் உள்ளடக்கிய மக்கள் இதயங்கள்
வேற்றுமையிலும் ஒற்றுமையாய் ஏற்றுக்கொள்வது உங்களின் பெருமைகளை..
உயிரோடிருந்தவரை அறிவுரை வழங்க ஓய்வெடுக்கவில்லை நீங்கள்.
இன்று மீளா ஓய்வில்... பொறுத்திருங்கள் எங்கள் இதய நாயகரே!
உங்களின் கனவுகளை மெய்ப்பிக்க அக்னி சிறகுகள் கொண்டு
எம் இளைஞர்கள் உங்கள் வழியில் சாதனை பயணம் தொடங்கி விட்டார்கள்!
- ஆகர்ஷிணி