ஆடி முளைக்கொட்டு திருவிழா: அன்ன வாகனத்தில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்
ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 2ஆம் நாளான்று மதுரை மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு அம்மன் முதல்நாளில் சிம்ம வாகனத்திலும் இரண்டாம் செந்தூரப் பட்டு கட்டி அலங்கார ரூபினியாக அன்னம் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் கண் குளிர மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரைக்கும் 12 மாதங்களும் விழாக்கள் களைகட்டும். கொரோனா பரவலை முன்னிட்டு சித்திரை திருவிழா கோவிலுக்குள்ளேயே பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. வைகாசி வசந்த உற்சவமும் நடந்து முடிந்த நிலையில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விவசாயம் செழிக்க வேண்டியும் தட்சிணயன புண்ணியகாலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் நடைபெற உள்ள இந்த திருவிழா வருகிற 22ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது. விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முதல்நாள் இரவு சிம்ம வாகனங்களில் எழுந்தருளிய அன்னை மீனாட்சி, நேற்று காலையில் கிளிப்பச்சைப்பட்டு கட்டி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அலங்கார ரூபினியாய் காட்சி அளித்த அன்னை மீனாட்சியை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
2ம் நாளான நேற்று இரவு அன்ன வாகனத்தில் செந்தூர பட்டு கட்டி ஆடி வீதியில் உலா வந்தார். 3ஆம் நாளான இன்று காலையில் கரும்பச்சை பட்டு உடுத்தி தங்க வைர நகைகளை அணிந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
இன்று இரவு காமதேனு வாகனத்தில் அருள்பாலிக்கிறார். நான்காம் நாளன்று யானை வாகனத்திலும் 5ஆம் நாள் ரிஷப வாகனங்களின் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 6ஆம் நாளன்று கிளி வாகனத்திலும் 7வது நாள் மாலை மாற்றுதல், 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமான வாகனத்திலும் எழுந்தருளுகிறார். விழாவின் இறுதி நாளான 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழா என்பதால் உற்சவர் அம்மன் தனியாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.