குரு பெயர்ச்சி 2021: குருபகவானின் பார்வையால் இந்த 6 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்
பொன்னவன் குருபகவான் பிலவ ஆண்டில் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும் என்று பார்க்கலாம்.
சென்னை: குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த பிலவ ஆண்டில் அதாவது 2021,2022ஆம் ஆண்டில் குருபகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தினால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களின் குரு பகவான் பொன்னவன் என்று போற்றப்படுகிறார். குருவின் பார்வை பொன்னான பலன்களைத் தரும் என்பதால்தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்ற பழமொழி ஏற்பட்டது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார்.
மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.31 மணியளவில் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். குரு பகவான் மூன்று ராசிகளில் பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அமைச்சர் பதவி, அரசியல் செல்வாக்கு தரும் குரு பகவான் - யாருக்கெல்லாம் தேடி வரும் தெரியுமா
மேஷம்
குரு பகவான் மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானங்களில் பயணம் செய்வதால் உங்களுக்கு வேலை தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுககளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அபரிமிதமான பண வரவு வரும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும். மகன், மகளுக்கு உயர்கல்விக்காக செலவு செய்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். கும்பத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை உங்களுடைய களத்திர ஸ்தானத்தின் மீதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும், முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் உங்களுக்கு திருமண சுப காரியங்கள் நடைபெறும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். கேது, சனியின் சஞ்சாரத்தினால் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் குருவின் பார்வையால் நோய்கள் நீங்கும். உணவு விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவ்வப்போது மருத்துவ செலவுகள் வந்தாலும் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தில் இந்த ஆண்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு சில மாதங்கள் கிடைக்கிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் திடீர் பண வரவு வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். நவம்பர் மாதத்திற்குப் பிறகு, வேலை தொழிலில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் சிலருக்கு வேலையில் திடீர் பிரச்சினைகள் வரலாம். உயரதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுவதால் குடும்பம் குதூகலமாக இருக்கும், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். சிலருக்கு வீடுகட்டும் யோகமும் கை கூடி வரப்போகிறது. பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உற்சாக மனநிலைக்கு மாறுவீர்கள்.
மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பது, பத்தாம் வீடுகளில் குருபகவான் பயணம் செய்கிறார். அஷ்டம குரு சில நேரங்களில் கஷ்டங்களையும் காரியத்தடைகளையும் கொடுத்தாலும் குருவின் பார்வை உங்களுக்கு நன்மையை தரக்கூடியதாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் குரு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். மன குழப்பங்கள் முடிவுக்கு வரும். திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கை கூடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வருமானம் வரும். அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட துன்பங்கள் முடிவுக்கு வரப்போகிறது.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானம், அஷ்டமத்து ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை சில மாதங்கள் உங்கள் ராசிக்கு கிடைத்தாலும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சியால் சில காரியத்தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசி முடிவு செய்ய வேண்டும் என்றால் ஆவணி கடைசியில் தொடங்கி கார்த்திகை மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பங்குனி மாதத்திற்கு மேல்தான் திருமணம் விசயமாக பேச வேண்டும். குரு நவம்பர் மாதம் இடப்பெயர்ச்சியாகி எட்டாவது வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. உடலில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் உங்களுடைய ஆரோக்கியம் சீரடையும். பண வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும். அவசரப்பட்டு கடன் வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறு,ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டிலும் பயணம் செய்யும் குருபகவான் சில நேரங்களில் சாதகமான பலன்களையும் சில நேரங்களில் பாதகமான பலன்களையும் கொடுக்கப் போகிறார். கடன்கள் அதிகம் கிடைக்கிறதே என்பதற்காக கடன் வாங்க வேண்டாம் மாட்டிக்கொள்வீர்கள். நவம்பர் மாதத்தில் குரு பகவான் நேர்கதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இதன் பின்னர் உங்கள் ராசிக்கு கிடைக்கும் குரு பார்வையால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படப்போகிறது. தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த குடைச்சல்கள் நீங்கி மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் சம்பள உயர்வும் கிடைக்கும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே,உங்கள் ராசிக்கு சில மாதங்கள் குருவின் பார்வை கிடைப்பது சிறப்பம்சம். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்து, ஆறு, ஏழாம் வீடுகளில் பயணம் செய்வதால் குரு பலன் வந்துள்ளது. நவம்பர் மாதத்திற்குப் பிறகு மறைந்திருந்த நோய்கள் எட்டிப்பார்க்கும் திடீர் மருத்துவ செலவுகள் வரும். உணவு விசயங்களில் கவனம் தேவை. தூக்கத்தினால் பிரச்சினைகள் ஏற்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக பயணம் செய்யும் காலத்தில் குருவின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நோய் பிரச்சினைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகளும் மன உளைச்சலும் நீங்கும். எந்த ஒரு விசயத்திலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். திருமண சுப காரியங்கள் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.