மாங்கனி திருவிழா 2021: பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் கோலாகலம்
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் பரமதத்தர், காரைக்கால் அம்மையார் திருமணம் பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது.
காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி இன்று தேதி எளிமையான முறையில் நடைபெற்றது.

பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம்
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மிக எளிமையான முறையில் கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமை மாப்பிளை அழைப்புடன் விழா தொடங்கியது. இன்று காலை பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவம்
திருமண வைபவம் தொடங்கியதும் மகா மண்டபத்திற்கு புனிதவதியார் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் திருமங்கல்யத்தை எடுத்து அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.

அமுது படைத்தல்
இன்று மாலை பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. வெள்ளை சாத்தி நடைபெறும். 24ஆம் தேதியன்று பிச்சாண்டவர் கோவிலின் உட்பிரகாரத்தில் மாங்கனி இறைத்தல் வைபவம் நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவ பெருமானுக்கு அமுது படைத்தல் வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும்.

கோவிலுக்குள் விழா
வழக்கம் போல பிச்சாண்டவர் நகர்வலம் வரும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாங்கனியை இறைத்து வேண்டிக்கொள்வார்கள். பக்தர்கள் இறைக்கும் மாங்கனியை பிடித்து பிரசாதமாக சாப்பிடுவார்கள். இதன் மூலம் பக்தர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாங்கனி திருவிழா கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம் யூ டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications