வைகாசி பவுர்ணமியில் 12 அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை..அறநிலையத்துறை செய்த பரிகாரம் யாருக்கு?
திருச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. மண்டைக்காடு பகவாதி அம்மன் கோவிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறைசார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, வைகாசி பவுர்ணமி தினமான நேற்று 12 அம்மன் கோவிலில்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

12 அம்மன் கோவில்கள்
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகிய 12 அம்மன் கோயில்களில் பவுர்ணமி நாளான நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பவுர்ணமி குத்துவிளக்கு பூஜை
அறநிலையத்துறை அறிவித்துள்ள 12 கோயில்களிலும் 108 திருவிளக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இத்திட்டம் வைகாசி மாத பவுர்ணமி நாளான நேற்று தொடங்கியது இனி மாதந்தோறும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பொருட்கள்
இந்த பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தலா ஒரு பித்தளை காமாட்சி விளக்கு 125 கிராம் எடை எவர்சில்வர் குங்குமச்சிமிழ், மஞ்சள் தூள், குங்குமம், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலிக்கயிறு செட், விளக்குத் திரி, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம்பழம், பூச்சரம், பூக்கள், பச்சரிசி (500 கிராம்), தீப எண்ணெய் (100 மில்லி), பூஜை பை, பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை மற்றும் சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜையில் பங்கேற்கும் பெண்களிடமிருந்து மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு தொகையாக தலா ஒருவரிடம் ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படும்.

என்னென்ன தகவல்கள்
பூஜையில் பங்கேற்கும் பெண்களின் புகைப்படம், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியலை அந்தந்த கோயில்கள் பராமரிக்கவும், ஒரு பூஜையில் பங்கேற்ற பெண்கள் இயன்றவரை அடுத்து வரும் பூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆன்மீக அரசாக மாறிய திமுக
திருவிளக்கு பூஜை பொதுவாக குடும்ப நலனுக்காக கோவில்களில் பெண்கள் செய்வது வழக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை சார்பில் மழைக்காக யாகம் நடத்தினாலே திமுகவினர் கிண்டலடிப்பார்கள். மகாசிவராத்திரி விழா தொடங்கி கோசாலை அமைத்தல், திருவிளக்கு பூஜை என முழுவதுமாக ஆன்மீக அரசாக மாறி வருகிறது திமுக அரசு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications