ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் - கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், சொரிமுத்து ஐயானார் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 25ஆம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை மலைக்கு செல்ல பத்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் திரண்டனர்.காலை 7 மணி முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஆடி அமாவாசை நாளை வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மலை ஏறினர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதித்த பின் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேன், கார்களில் சதுரகிரி மலை அடிவாரத்திற்கு வந்து குவிந்தனர்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மடத்தின் சார்பில் மலை அடிவாரம் மற்றும் மலை மேல் கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வரவும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பவும் பஸ் வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாதைகளில் மருத்தவ முகாம்கள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரியில் குவியும் கூட்டம் - பலத்த பாதுகாப்பு
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆடி அமாவாசை தினம் இந்த ஆண்டு நாளை வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளில் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஆடி அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 3.30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படுகிறது. அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவுவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுகிறார்கள்.
ஆடி அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக் காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு10மணிக்குஅம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதன் பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத ன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications