அதிர்ஷ்ட பெருக்கெடுக்கும் ஆடி பதினெட்டு!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆடி பெருக்கு:
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கல விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.அனைவரையும் வாழ வைக்கும் அந்தக்காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
"ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்:
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி
என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர்.
தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்....
பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள்.அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.
காவிரிக்கு சூல்:
இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி - தலை வாழையிலையில் - காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்கு சீர்:
ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்
Recommended Video
ஜோதிடத்தில் ஆடி பதினெட்டு:
ஆடி பதினெட்டு என்பது சூரியன், சந்திரன், புதன் ஆகியவர்களுக்கு ஏற்படும் தொடர்புகளை குறிப்பதாகவே அமைந்திருக்கிறது. காவிரிக்கு சீர் கொடுப்பது என்பது ஒரு பாரம்பரியமான விழாவாகும்.
ஜோதிடத்தில் பாரம்பரியத்தை குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். நதியை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும். சீர் வரிசை மற்றும் சித்திராண்ணங்களை குறிக்கும் கிரகம் புதனாகும்.
ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆடி பதினெட்டு
அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.
ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள்.
சூரியன் புதனின் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது நல்லது.
மேலும் ஸ்ரீரங்கநாதர் காவிரியை சகோதரியாக கருதி சீர்செய்வதாகவும் அமைந்திருக்கிறது. நதியை குறிக்கும் கடகத்திற்க்கு சகோதர பாவமாக அதாவது மூன்றாம் பாவமாக வருவது கன்னியாகும். காவிரிக்கும் கடகத்திற்க்கும் அதிபதி சந்திரன் ஆகும். மாலவனுக்கும் கன்னிராசிக்கும் காரக கிரகம் புதன் ஆகும்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக சூரியன் புதனின் ஆயில்யத்திற்க்கு பயணிக்கும் அதேவேளையில் சந்திரன் மற்றொரு நீர் ராசியான விருச்சிகத்தில் புதனின் கேட்டை நக்ஷத்திரத்தில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆடிபதினெட்டு விழாவை கொண்டாடுவதன் மூலம் பாரம்பரியத்தையும் விவசாயத்தையும் காப்பதோடு சூரியன்,சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரங்களின் அருளும் பெரும் என்பது திண்ணம்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.