ஆடி பவுர்ணமி..அரிவாள் மீது ஏறி நின்று குறி சொன்ன பூசாரி..பூக்குழி இறங்கிய பக்தர்கள்
தூத்துக்குடி: ஆடிமாத பௌர்ணமி கொடை விழாவை முன்னிட்டு பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத பௌர்ணமி கொடை விழா மிகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆடி மாத பௌர்ணமி கொடை விழாவை முன்னிட்டு ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து பின் பால், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ அலங்கார பூஜையும், தீபாராதனையும் காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சியும், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இங்குள்ள ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் சுவாமிக்கு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதுரை கள்ளழகர் கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும், வைபவங்களும் இந்த கோவிலிலும் நடைபெறும் என்ற தனி சிறப்பினை பெற்றுள்ளது பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications