Aippasi month rasi palan 2020: ஐப்பசி மாத ராசி பலன் 2020 - எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்
ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் மிதுனம் கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
இருக்கும் என்று பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் மீனம் ராசியில் வக்ரமடைந்துள்ளார். ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் வக்ர புதன், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
நவ கிரகங்களின் இடமாற்றம் காரணமாக இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்ற சஞ்சாரத்தினால் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தன வரவு
மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. விரைய ஸ்தானத்தில் ராகு, தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் சூரியன், புதன் ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் செய்யலாம். மருத்துவ செலவுகள் குறையும், வீண் செலவுகள் கட்டுப்படும்.
ஆரோக்கியம் அற்புதம்
குருவின் வீட்டில் வக்கிரமடைந்து சஞ்சரிக்கும் செவ்வாயினால் பூமி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வீடுகளை புதுப்பிக்கும் வேலைகளை செய்யலாம். தடைப்பட்ட திருமணங்கள் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
முன்னேற்றம்
தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நன்மைகள் ஏற்படும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். படிப்பில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். இந்த மாதம் ஐப்பசி 7ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிமுதல் 9ஆம் தேதி இரவு 8.07 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாவும் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமை
விநாயகரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
பணவரவு தாராளம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. யோகமும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பண வரவு தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களிடம் இருந்து வீட்டிற்கு பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் வரும். ராசிக்கு மூன்றாம் வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை
அற்புதமாக அமைந்துள்ளது. வேலையில் மேன்மை உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பண வருமானம்
செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய யோகங்கள் தேடி வரும், தாய் மாமன் வகையில் உதவிகள் தேடி வரும். கலைத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பண வருமானமும் அதிகரிக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். அரசுத்துறையில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களால் அலைச்சல் அதிகமாகும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். கோர்ட் கேஸ் வம்பு வழக்கு பிரச்சினைகள் தீரும்.
மனதில் நிம்மதி
பிள்ளைகள் வழியில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தேடி வரும். நோய்கள் வெளிப்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்து செல்லும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். காவல்துறை, மின்துறை பணி செய்பவர்களுக்கு யோகம். இந்த மாதம் உங்க ராசிக்கு 9ஆம் தேதி ஞாயிறு இரவு 8.08 மணி முதல் 12ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.26 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.வீண் பேச்சுக்களை தவிர்த்து விடவும். பாதிப்புகள் நீங்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் உள்ள கருடாழ்வாரை விளக்கேற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.