அழகர்கோவிலில் தங்கக்கருட வாகனம் எழுந்தருளிய கள்ளழகர் - மண்டூக மகரிஷி சாப விமோசனம்
அழகர் கோவிலில் கருடவாகனத்தில் தரிசனம் கொடுத்த அழகர் அங்கே தண்ணீரில் தவமிருந்த மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தார்.
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி அழகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகனத்தில் அழகர் தரிசனம் கொடுத்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் ஷேச வாகனத்தில் தரிசனம் தந்து நாரைக்கு முக்தி கொடுத்தார்.
சித்திரை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். வண்டியூர் சென்று தேனூர் மண்டபத்தில் தன் வருகைக்காக தவமிருக்கும் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனமும், நாரைக்கு முக்தியும் கொடுப்பார்.
Recommended Video
ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதார கோலத்தில் காட்சி தரும் பெருமாளை காண்பதற்காக மதுரை நகர மக்கள் கண் விழித்து காத்திருப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு எதையுமே பார்க்க முடியாமல் செய்து விட்டதால் கள்ளழகர் தரிசனம் அழகர்கோவிலோடு முடிந்து விட்டது. பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் தரிசனம் கொடுத்த கள்ளாகர் மாலையில் ஷேச வாகனத்திலும் கருட வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளியதை வர்ணித்த அந்த வர்ணணையாளருக்கு கண்களில் கண்ணீர் திரண்டது.
பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்து தரிசனம் தந்த கள்ளழகர்
சைவ வைணவ ஒற்றுமை
எந்த ஒரு விழாவும் காரண காரியம் இன்றி நடைபெறாது. மதுரை சித்திரை திருவிழாவும் அப்படித்தான். மீனாட்சி திருக்கல்யாணமும் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வும் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருஷமும் கள்ளழகர் வைகையில இறங்குவதை பார்க்க பல லட்சம் பேர் மதுரைக்கு வருவாங்க. இந்த ஆண்டு அப்படி ஒரு நிகழ்வு நடைபெறாமல் செய்து விட்டது கொரோனா வைரஸ்
நூபுர கங்கை தீர்த்தம்
இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்காவிட்டாலும் மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடந்தது ஏன் என்று பலரும் யோசிக்கலாம் யார் இந்த மகரிஷி அவர் எப்படி மண்டூகமாக மாறினார் என்பது ஒரு புராண கதை இருக்கிறது. அழகர் மலையில் நூபுரகங்கை தீர்த்தம் இருக்கிறது இது கங்கையை போல புனிதமான தீர்த்தம். அந்த தீர்த்தம் அழகர் மலையில் உருவானதும் புராணகதைதான்.
பெருமாளை நினைத்து தவம்
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்ட மகாவிஷ்ணு இந்த உலகத்தை அளக்க தனது திருவடியை மேலே தூக்கிய போது பிரம்மன், மகாவிஷ்ணுவின் பாதத்தை கழுவி பூஜை செய்தார். அப்படி பூஜை போது மகாவிஷ்ணுவின் கால் சிலம்பு எனப்படும் நூபுரம் அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெறித்து அழகர்மலை மீது விழுந்தது. அதுவே இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார்.
சாபம் கொடுத்த முனிவர்
அப்போது சுதாபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை கவனிக்கவில்லை. அவரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே போ என சாபமிட்டார். மண்டூகம் என்றால் தவளை என்று பொருள்.
வைகை ஆற்றில் தவம்
சாபம் பெற்ற சுதபஸ், கண்ணீர் விட்டார், கைகூப்பிய அவர், துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய் என்றார். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றும் கூறினார்.
சாப விமோசனம் கொடுத்த பெருமாள்
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் ஆக கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லாக்கில் கிளம்பி மதுரைக்கு வருவார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். சித்ராபவுர்ணமி தினத்தில் தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தோனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்.
பெருமாள் தரிசனம்
இந்த ஆண்டு பெருமாள் மதுரைக்கு வராவிட்டாலும் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருளினார். மாலையில் ஷேச வாகனத்தில் எழுந்தருளி நாரைக்கு முக்தி கொடுத்தார். பின்னர் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி தண்ணீரில் மண்டூகமாக தவமிருந்த முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தார். ஆண்டுதோறும் மக்கள் மத்தியில் நடந்த இந்த நிகழ்வு கோவிலுக்குள் ஆகம விதிப்படி நடைபெற்றது.
பெருமாள் தரிசனம்
சேஷ வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டும். அதே போல பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பது பெரிய புண்ணியம். பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.