திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா - கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தில் தங்க கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி பக்தர்கள் கோவிந்த முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாடவீதிகளில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
கொரோனா பரவல் குறையவில்லை... பரிசோதனைகளே குறைக்கப்பட்டுள்ளது... தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ காலங்களில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
கருட வாகனம்
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார் பெருமாள். எனவேதான் பெருமாள் கோவில்களில் கருட கொடி ஏற்றப்படுகிறது. கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம்.
தங்கக் கருட வாகனம்
கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாக்கள் ஏகாந்தமாக நடைபெற்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் உலா வருகிறார் மலையப்பசுவாமி. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பக்தர்கள்தரிசனம்
கருட சேவையில் எழுந்தருளும் சாமியை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
கருட சேவை
சித்திரை மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை நேற்றிரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் வசந்த உற்சவம்
ஏழுமலையான் கோவிலில் கடந்த 24ஆம் தேதி மூன்று நாட்கள் வசந்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆஸ்தானமும் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.