காரமடை ரங்கநாதர் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்.... தேரோட்டம் கோலாகலம்
கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்று முழக்கத்தோடு தேர் வடம் பிடித்துச் சென்றனர். தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

கொங்கு மண்டலத்தில் உள்ள வைணவ கோயில்களில் புகழ்பெற்றது கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரமடை அரங்கநாதர் ஆலயம். இக்கோயில் சுமார் 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

குறிப்பாக மாசி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் உள்ளுர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் கலந்துகொணடு சுவாமி தரிசனம் செய்வதுண்டு. இந்த ஆண்டு மாசி மாதத் திருவிழா கடந்த 11ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு உற்சவர் அரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன் பின்னர் கருட சேவையும் நடைபெற்றது.
பிப்ரவரி 15ஆம் தேதியன்று அருகிலுள்ள ஸ்ரீபெட்டத்தம்மன் மலையில் இருந்து ஸ்ரீபெட்டத்தம்மன் அழைப்பு வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 16ஆம் தேதியன்று அதிகாலையில் திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு 8 மணியளவில் யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:30 மணியளவில், ஸ்ரீஅரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தேரில் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளி காட்சியளித்த ஸ்ரீஅரங்கநாதரை தரிசிக்க, அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

பின்னர் மாலை 4 மணியளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி ஆரம்பானது. கோயிலின் நிர்வாகக் குழுவின் சார்பில் காரமடையில் உள்ள முக்கியஸ்தர்கள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதையடுத்து, மாலை 4:25 மணியளவில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் முதலில் தேர் வடம் பிடித்து தேரோட்ட வைபவத்தை தொடங்கி வைத்தனர்.
அதையடுத்து ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க திடலில் இருந்து தேர் புறப்பட்டது. தேரின் முன்னும் பின்னும் வந்த ஏராளமான பக்தர்களின் 'கோவிந்தா, ரங்கா, கோவிந்தா, ரங்கா ' என்று கோஷமும், தாசர்களின் சங்கொலியும் விண்ணை அதிர வைத்தன. நான்கு ரத வீதிகளிலும் குழுமியிருந்த ஏராளமான பக்தர்களின் மத்தியில் ஆடி அசைந்து வலம் வந்த தேர் இரவில் மீண்டும் திடலில் நிலை நின்றது.
காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கோயில் தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியை ஒட்டி காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications