தனத்திரயோதசி நாளில் லட்சுமி பூஜை செய்வதால் ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும்
தனத்திரயோதசி, தந்தேரஸ் நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளது. குபேர லட்சுமி பூஜை செய்ய தேவையானவை என்னவென்று பார்க்கலாம்.
சென்னை: தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். நாளைய தினம் தனத்திரயோதசி, தன்வந்திரி பகவானை வணங்கி பூஜை செய்ய நல்ல நாள்.
நிகழும் சார்வரி வருடம் ஐப்பசி 27ஆம் நாள் நவம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாளின் முதல் நாள் திங்கட்கிழமை தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. 'தந்தேரஸ்' என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர்.
தனத்திரயோதசி நாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு எமதீபம் என்று அழைக்கப்படுகிறது.
தன திரயோதசி தினத்தில்தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.
இத்திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. வெள்ளிக்கிழமை பிரதோஷ நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.
தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் வெள்ளி, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம். தனத்திரயோதசி தினமான நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிமுதல் 5.59 மணிவரை பூஜை செய்ய நல்ல நேரமாகும். லட்சுமி குபேர பூஜை செய்ய செல்வ வளம் பெருகும்.
தனத்திரயோதசி தன்வந்திரி திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். தன்வந்திரி அவதாரம் தீபாவளி அமாவாசைக்கு முன்தினம் வருகின்ற இந்த நாளில் தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி தோன்றினார். நோய்கள் நீங்கவும், அகால மரணங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் தனத்திரயோதசி நாளில் தன்வந்திரி பகவானை வணங்கலாம்.