கோயில் கொடிமரமும்... சூரியனின் தொடர்பும்
கோவில்களில் உள்ள கொடி மரத்திற்கும் நவகிரங்களின் தலைவன் சூரியனோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. ஜோதிட சாஸ்திரத்தில் கொடிமரத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். இதை ஏன் செய்கிறோம் என்று தெரிந்து கொண்டால் இதன் மகத்துவம் புரியும். வழிபாட்டிற்குச் செல்லும்போது மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். பலிபீடம் அருகே நின்று நான், எனது என்ற எண்ணத்தை மானசீகமாக விடுக்க வேண்டும்.

மனித உடலும் ஆலயமும்
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள். கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத் தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.
மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.

கொடிமரமும் - மனிதனும்
கொடிமரம் மனித உடலில் முதுகெலும்பின் செயல்பாட்டினை விளக்குவம்.கொடிமரம் மனிதனுடைய முதுகு தண்டிற்கு ஒப்பானதாக விளங்குகிறது.கொடிமரத்தில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் அல்லது தட்டும் மனிதனின் முதுகிலுள்ள இணைப்பை குறிப்பிடுகின்றன. கொடிமரத்திலுள்ள உச்சி பகுதியில் அமைந்திருக்கின்ற மூன்று நிலைகள் மனிதனின் மூவித மூளைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை பெருமூளை (Cerebrum).மத்திய மூளை (Midbrain), கீழ்மூளை (Cerebellum) ஆகியவை.
திருவிழாக் காலங்களில் கொடிமரத்தின் கயிறு உச்சி ஏறி தொடுவதைப் போல அமைந்திருக்குமானது உடலிலுள்ள நரம்பு கற்றைகள் அனைத்தும் முதுகு தண்டு வழியாக செல்வது போல் உள் மற்றும் வெளி உணர்வுகளின் செயல்பாட்டின் தொடர்புகளை மூளைக்கு அனுப்பி வைக்கும் செயலை கொடிமரத்தில் காண்பிக்கப் படுகின்றன.
நரம்பு கற்றைகள் அனைத்தும் உடலில் பல பாகங்களுக்கு இணைக்கப் பட்டு நரம்பு வழியாக தகவல் தொடர்பினை பெறப்பட்டு இதன் வாயிலாக உள் மற்றும் புற சூழ்நிலைக் கேற்றவாறு மூளைக்கு தகவல் அனுப்புவதும் பெறுவதுமாக அமைகின்றது.

ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூட்சும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
கொடிமரமும் ஜோதிடமும்:
கொடிமரத்திற்க்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என கேட்டால் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. மேலே கூறிய விளக்கங்களின்படி கொடிமரத்திற்க்கு எந்த கிரகத்தின் காரகதுவம் பெற்றிருக்கிறது என ஆராய்ந்தால் சூரியனோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
கொடிமரம் சிவபெருமான்; சூரியனுக்கும் அதிதேவதை சிவன் என்பது இங்கே கவனிக்கவேண்டிய விஷயமாகும். கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும்.
கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.
ஜோதிடத்தில் சூரியனை ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியை கவனிமயத்தால் ஆன்மாவானது பந்தபாசங்களில் இருந்து விடுபட்டு சிவயோக நிலையை அடைவதையே குறிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் கொடிமரத்தை மனிதனின் முதுகெலும்புடன் ஒப்பபிடப்பட்டுள்ளது. முதுகெலும்பின் காரகன் சூரியன் என்று மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. கால புருஷ ராசிப்படி சிம்ம ராசி முதுகெலும்பை குறிக்குமிடமாகும். சிம்ம ராசி சூரியனின் வீடு தானே!
மேலும் விருக்ஷ சாஸ்திரம் உயர்ந்த கம்பீரமான மரங்களுக்கதிபதி சூரியன் என்கிறது. கோயில் கொடிமரங்கள் உயரமான ஒரே மரத்தில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக பழமையான கோயில்களில் கொடிமரத்தில் தாமிரத் தகடால் கவசமிட்டிருப்பதை பார்க்கலாம். ஆக தாமிரம் சூரியனின் உலோகம் என்பதும் பொருத்தம்தானே.












Click it and Unblock the Notifications