ஏழுமலையான் பக்தர்கள் ஏப்.1 முதல் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் - திருப்பதி தேவஸ்தானம் அனுமதி
திருப்பதியில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சென்னை: ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழக்கம்போல் இலவசமாக வழங்கப்படும். அங்க பிரதட்சண டிக்கெட் பெறும் பக்தர்கள் மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்து.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்காக தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால் மின்னணு குலுக்கல் முறையில் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள பி.ஏ.சி.-1 ஹால் கவுண்டரில் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழக்கம்போல் இலவசமாக வழங்கப்படும். அங்க பிரதட்சண டிக்கெட் பெறும் பக்தர்கள் மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications