மலைத் தேனும் தினை மாவும்... பழனி மலை முருகனுக்கு ஆட்டம் பாட்டத்துடன் சீர் வரிசை அமர்க்களம்
பழனிமலை முருகன் கோயிலில், பழங்குடியின மக்கள், தாய் வீட்டு சீதனமாக தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைப் பொருட்களை முருகனுக்கு படைத்து, பாரம்பரிய நடனமாடி வழிபாடு செய்தனர்.
பழனி:வள்ளிக் குறத்தியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால், தாய்வீட்டுச் சீதனமான மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களை, சீர்வரிசையாகக் கொண்டு வந்து மாப்பிள்ளை பழனி மலை முருகனை தரிசனம் செய்துள்ளனர் பழங்குடியின மக்கள். மா, பலா, வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள், கிழங்கு வகைகள், மலைத் தேன், தினைமாவு, மலையில் விளைந்த காய்கறிகள் ஆகிய சீர்வரிசைப் பொருட்களுடன் குறவன் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் என தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிப்பாடினர்.
Recommended Video
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் இருப்பிடம் மலை ஆகும். சங்க காலம் தொட்டே முருகப் பெருமான், மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி நிலக்கடவுளாக வைத்து போற்றப்படுகிறார். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் கண்கண்ட தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்.
இதனால் தான் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்கிரி, திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்ச்சோலை, ஏழாவது படைவீடு என்று சொல்லப்படும் மருதமலை மற்றும் பெரும்பாலான முருகன் கோயில்களும் மலைக் கோயில்களாகவே அமைந்துள்ளன.

தைப்பூசம்
முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு புகழ்பெற்றது மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வணங்கிச் செல்வதுண்டு. ஆனால் நடப்பு ஆண்டு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தது.

சீர்வரிசை பொருட்கள்
தமிழக அரசின் தடையுத்தரவால், தைப்பூச திருவிழா முடிந்த பிறகு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப் பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். இதனால் பழனி மலையில் நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான குறவர் இன மக்களும், வனவேங்கைகள் கட்சியினரும் தங்களின் சீர்வரிசைப் பொருட்களுடன் பழனி மலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனும் தினை மாவும்
முன்னதாக, தங்களின் சீர்வரிசைப் பொருட்களான, மா, பலா, வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள், கிழங்கு வகைகள், மலைத் தேன், தினைமாவு, மலையில் விளைந்த காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில் நார்க் கூடைகளில் வைத்து, பழங்குடியின பெண்கள் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் முன்பு, மேளம், பறை உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க சிறுவர், சிறுமியர்கள் குறவன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடிப்பாடி வந்தனர்.

காவடி ஆட்டம்
பின்னர், மலையடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயிலின் முன்பாக, சீர்வரிசைப் பொருட்களுடன் குறவன் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் என தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிப்பாடினர். தொடர்ந்து, மலைக்கோயிலுக்குச் சென்று சீர்வரிசைப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.

தாய் வீட்டு சீதனம்
எங்கள் குறவர் இன மகளான வள்ளிக் குறத்தியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால், தாய்வீட்டுச் சீதனமான மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களை, சீர்வரிசையாகக் கொண்டு வந்து முருகனை தரிசனம் செய்தோம் என்று வனவேங்கைகள் கட்சியின் மாநிலத் தலைவரான இரணியன் தெரிவித்துள்ளார். இதே போல் இனி ஆண்டு தோறும் வழிபடுவோம். பூர்வகுடி மக்களான எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications