திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டிச.1ல் கொடியேற்றம் - டிச.10ல் மலை மீது மகாதீபம்
திருவண்ணாமலை: ஆண்டுதோறும் நடைபெறும் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை மாத பிரம்மோற்சவ தீபத்திருவிழா, இந்த ஆண்டு வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 10ஆம் தேதியன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலையில் மலையே சிவமாக விளங்கும் உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். மலையே சிவமாகி நின்று காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், யாமே இவ்வுலகில் பெரியவர் என்ற உண்மையை உணர்த்துவதற்காகவே, திருவண்ணாமலையில் ஜோதி வடிவாக தோன்றியவர் எம்பெருமான் இறையனார் ஈசன். இதன் காரணமாகவே இத்தலத்திற்கு அடி முடி காண முடியாத அண்ணாமலையார் என்ற பெருமை உண்டு.
இம்மலைக்கு காந்த மலை என்றும் பெயருண்டு. ஒருமுறை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு செல்வோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல் இழுப்பதாலேயே இந்தப் பெயர் ஏற்பட்டது. நான்கு யுகங்களில் முதலாவதாக வரும் கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேத யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரா யுகத்தில் பொன் மலையாகவும், இந்த கலியுகத்தில் கல் மலையாகவும் விளங்குகிறது.
அகிலமெங்கும் எண்ணற்ற சிவாலயங்கல் அமையப்பெற்றாலும், வேறெங்கும் தரிசிக்க முடியாத தனிச்சிறப்பு, இந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு உண்டு. அதோடு, பஞ்சபூத ஸ்தலங்களில் மூன்றாவதாக விளங்கும் அக்னி எனப்படும் நெருப்பு ஸ்தலமாக அமையப்பெற்றுள்ளது அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். தீப்பிளம்பாக இம்மலை தோன்றியதால் தான் அருணாச்சலம் என்றும் அழைக்கின்றோம்.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது போல், அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலிலும் ஆண்டுதோறும் நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் கார்த்திகை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் தான் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளில் அதிகாலையில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததை உணர்த்தும் வகையிலேயே மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் திருவண்ணாமலை நகர் முழுவதுமே பக்தர்களின் பக்திப் பரவசத்தில் மூழ்கிக் கிடக்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான டிசம்பர் 1ஆம் தேதி அதாவது கார்த்திகை 15ஆம் தேதியன்று வழக்கம்போல, விடியற்காலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பின்பு பஞ்சமூர்த்திகளும் அருகில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே கொண்டுவரப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, மேள தாளத்துடன், 5.30 மணிக்கு மேல் காலை 7.05 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறும்.
இதனையடுத்து. டிசம்பர் 6ஆம் தேதியன்று முக்கிய நிகழ்வான வெள்ளி ரத பவனியும், டிசம்பர் 7ஆம் தேதி மகா தேரோட்ட வைபவமும் நடைபெறும். முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அன்று அதிகாலை அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சந்நிதியில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.