கார்த்திகை அமாவாசை : கனமழையால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பிரதோஷம் மற்றும் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில், சந்தனமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது இந்த தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.
இந்த ஆலயத்திற்கு வந்து மலையேறி சென்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள். வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சில மாதங்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவ்வப்போது வனப்பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
கார்த்திகை சோமவாரம்: சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தால் என்னென்ன நன்மைகள்
கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும் எனவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.