பிரிந்தவர்களை கூட வைக்கும் கூடாரவல்லி... ஆண்டாளை தரிசித்தால் மனம்போல மாங்கல்யம்
: மார்கழி மாதத்தில் விஷ்ணு கோயில்களில் மார்கழி மாதத்தின் 27ஆம் நாள் கூடார வல்லி நிகழ்வு நடைபெறுவது வழக்கம்
மதுரை: வைஷ்ணவத் திருத்தலங்களில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் கூடாரவல்லி வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதிகம். திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீ பவளவண்ண பெருமாளுக்கு நான்கடியில் மயில் இறகுகளாலான பிரம்மாண்ட மாலை அணிவிக்கபட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள். மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் கிட்டும்.
வேட்பாளர்கள் தேர்வில் திமுக மும்முரம்! அந்த 3 விஷயங்களின் அடிப்படையில் நேர்காணல்கள்!
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடலை பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
நெய் வழிய அக்கார அடிசல்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்." என்று தன் 27வது பாசுரத்தில் கண்ணனை நினைத்து பாடியுள்ளார். கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த 'சர்க்கரைப் பொங்கல்' எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.
ஆண்டாளின் வேண்டுதல்
பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
திருமாங்கல்ய பூஜை
திருமணம் ஆகாத பெண்கள் தாங்கள் விரும்பும் நல்ல மணமகனைப் பெறுவதற்கும் திருமணமான பெண்கள் கணவனுடன் நல்லன்போடு குடும்பம் நடத்தவும் இன்றைய தினம் ஆண்டாளை வணங்கலாம். கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம்.
கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில்
திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீ பவளவண்ண பெருமாளுக்கு நான்கடியில் மயில் இறகுகளாலான பிரம்மாண்ட மாலை அணிவிக்கபட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வண்ண வண்ண மலர்களால் கூடாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பாவை பாடல் பாடி கூடாரவல்லி நிகழ்வை பக்தர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்று நிகழ்வின் விசேஷமான அக்காரவடிசல் பிரசாதத்துடன் ஐந்துவகை பிரசாதம் வழங்கப்பட்டது