குலசை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா - பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா விழாவிற்கு சிறப்பு பெற்றது. சக்தி வாய்ந்த இந்த அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆடிக்கொடை திருவிழா திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.
திருவிழா நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 ம் தேதி அன்று தீபாராதனை, 4 ம் தேதி அன்று திருக்கோவில் வளாகத்திற்குள் கும்பம் (கரகம்) புறப்படுதலும் அன்று இரவு தீச்சட்டி புறப்படுதலும் நடைபெறும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று முளைப்பாளிகை திருக்கோவிலில் வலம் வருதல் உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் ஆடி கொடை விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் இந்நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும், கரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications