குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா 26ல் கொடியேற்றம்.. காளியாக மாற தயாராகும் பக்தர்கள்!
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்டோபம் 5ஆம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடக்கிறது. தசரா விழா தொடங்க உள்ளதை முன்னிட்டு விரதமிருந்து வேடமிடும் பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான். இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இவர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து பல்வேறு வேடமணிந்து பங்கேற்பதுதான் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ள நிலையில் வேடமிடும் பொருட்களையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
2 லிஸ்டையும் அனுப்புங்க! பாஜக புது அஸ்திரம்.. களமிறக்கப்பட்ட தலைகள்.. வேகமெடுக்கும் குஜராத் தேர்தல்
குலசை தசரா திருவிழா
முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, இந்த ஆண்டு வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்டோபம் 5ஆம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடக்கிறது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வேண்டுதல் வைப்போரும் கோயிலில் காப்பு கட்டி வேடமணிந்து 61, 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர்.
வேடமணியும் பக்தர்கள்
தசரா திருவிழா கொடியேற்றத்திற்குப் பின் திருக்காப்பு அணியும் பக்தர்கள் சிவன், பார்வதி, ராமன், லட்சுமணன், லட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, சுடுகாட்டு காளி, குறவன், குறத்தி என பல்வேறு வேடங்கள் அணிவர். இதற்காக குலசேகரன்பட்டினத்தில் ஆங்காங்கே குடில் அமைத்தும், கடைகளிலும் வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
களைகட்டிய விற்பனை
வேடம் அணியும் பக்தர்கள் அணியும் உடைகள் உள்ளிட்ட வேடப்பொருட்களை செய்யும் பணியில் தசரா குழுவில் உள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் பகுதி கடைகளிலும் வேடப்பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தசரா களைகட்டும்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குலசேகரன்பட்டினத்தில் உள் திருவிழாவாக தசரா திருவிழா நடைபெற்ற நிலையில், இந்தாண்டு முழுமையான தளர்வுகளுடன் வழக்கம்போல் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொடியேற்றத்துக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், தற்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளது குலசேகரப்பட்டினம்.