ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் பரவசம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கோலாகமாக நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவத்துடன் வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில். இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இலங்கையில் சீதா தேவியை மீட்க சென்றபோது இங்கு வந்து மாசாணியம்மனை ராமர் வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. கோவில் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த அம்மன் கையில் உடுக்கையுடன் சயன நிலையில் காணப்படுகிறார்.
ஆலயத்தின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல்லின் மீது பக்தர்கள் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டுதல் வைக்கின்றனர். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் மகிமையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு
பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை
பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர்.
கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர
தேவைகளுக்காக பபணியமர்த்தப்பட்டனர்.
குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாளை கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளை மறுநாள் 19ஆம் தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications