குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் பெருமாளை நோக்கி தவமிருந்த குரு பகவான் #Gurupeyarchi2019
குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப்பெயராகவும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். புத்திரகாரகன் குருபகவான் தனது புத்திரனுக்காக வைகை ஆற்றங்கரையில் தவமிருந்த தலம் குருவித்துறை. குருவின் தவத்தி
மதுரை: புத்திர பாக்கியம் வேண்டி எல்லோரும் குருபகவானை சரணடைவார்கள். அந்த குருபகவானே அசுரர்களிடம் இருந்து தனது மகனை காக்க வைகை ஆற்றங்கரையில் தவம் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? வைகை ஆற்றங்கரையில் குருபகவான் தவமிருந்த இடம் அவர் இருந்த பெயராலேயே குருவித்துறை என்று அழைக்கப்படுகிறது.
ஒன்பது கோள்களில் சூரியனிடம் இருந்து ஐந்தாம் இடத்தில் இருப்பவர் வியாழன். இவர் தேவர்களுக்கு குருவாக விளங்குபவர். அசுரர்களுக்கு சுக்ராச்சாரியார் குரு என்றாலும் நவகிரகங்களின் குரு என்ற சொல் வியாழனையே குறிக்கும். ப்ருஹஸ்பதி, பொன்வண்ணன், மந்திரி, ஆங்கீரசன், வாகீசன், கீஷ்பதி, வேதியன், புனிதன் எனப் பல பெயர்கள் இவருக்கு உண்டு.
தனுசு,மீன ராசிகளுக்கு அதிபதியான குருவுக்கு கடகம் உச்சவீடு; மகரம் நீசவீடு. இவருக்கு சந்திரன், செவ்வாய், சூரியன் ஆகிய மூவரும் இவருக்கு நண்பர்கள். தூய்மை, அறிவுடைமைக்கு இருப்பிடமான இவர் சாந்தமான பார்வை உடையவர். புகழ், வாக்குவன்மை, ஞானம் இவற்றை அருளுபவர். ஜோதிட சாஸ்திரங்கள் இவரை புத்திரகாரகன் என்று அழைக்கின்றன. இந்த புத்திரகாரகன் தனது புத்திரனுக்காக தவமிருந்த தலம்தான் குருவித்துறை.
சுக்கிரன்
பிருகு முனிவரின் மைந்தர் பார்க்கவ முனிவர். காசியில் சிவ பூஜை செய்து அதன் பயனாக இறந்தவர்களை உயிர்பிக்கச் செய்யும் மிருதசஞ்சீவனி என்ற மந்திரத்தை வரமாக பெற்றார். நவகிரக பதவியும் பெற்றார். இவரே அசுரர்களின் குருவாகவும் ஆனார். தேவாசுரப்போர் தொடங்கிய உடன் போரில் பல அசுரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த அசுரர்களை உயிர்பித்தார் சுக்கிராச்சாரியார்.
குருவித்துறை கோவில்
இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கசன். இதை அறிந்த அவனுடைய தந்தை, கலங்கினார். கடும் கோபம் கொண்டார். உலகமே ஞானம் தேடி அவரைச் சரணடைகிறது. ஆனால், மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை. நாரதரிடம் ஓடினார். அவரும் ஆலோசனையை வழங்க... வேகவதி நதிக்கரையில், தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மனம் பூரித்த திருமால், அவருக்கு திருக்காட்சி தந்தார். சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார். அத்துடன் அவரின் கோரிக்கையை ஏற்று, அவருடைய மகன் கசனையும் மீட்டுத் தந்தருளினார்.
ஒரே சன்னதியில் குரு சக்கரத்தாழ்வார்
சித்திரரத வல்லப பெருமாள், சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள் இங்கே எழுந்தருளியுள்ளார்.
வைகை ஆற்றங்கரையில் குரு தவமிருந்த இடம் அவரது பெயராலேயே குருவித்துறை என்று அழைக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.
குரு பெயர்ச்சி பரிகாரங்கள்
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கொள்ளை அழகு! செண்பகவல்லித் தாயார் அழகுக்கு அழகு சேர்க்கிறார். குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்துகொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.
திருமண வரம் புத்திரபாக்கியம்
கோவிலின் அருகில் உள்ள வைகை நதியில் நீராடிவிட்டு, சித்திர ரத வல்லப பெருமாளுக்கு பொங்கலிட்டு தரிசனம் செய்தால் நம் தலைமுறையில் உள்ள மொத்த தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் திருமண தோஷங்கள் நீங்கப் பெற்று, விரைவில் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் பெறலாம்.