ஆவணி மூலத்திருவிழா : மதுரையில் இன்று சிவபெருமானுக்கு பட்டாபிஷேகம்
மதுரை என்றாலே மீனாட்சி ஆட்சிதான் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இங்கே சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி ஆட்சி நடக்கிறது. ஆவணி மூலம் முதல் சித்திரை வரை சிவபெருமான் ஆட்சி நடக்கிறது.
மதுரை: மதுரையில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவபெருமான் பட்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையான பிட்டுத்திருவிழா 23ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோவில்தான். மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். பட்டாபிஷேகம், திருமணம் என களைகட்டும்.
ஆடி மாதத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது. மதுரையில் திருவிழாக்கள் நடைபெறுவதை வைத்தே சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி என பெயர் வைத்துள்ளனர். ஆவணி மாதத்தில் ஆவணி மூலத்திருவிழா 16 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான ஆவணி மூலம் திருவிழா கடந்த 9ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ஆம் தேதி வரை சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் திருவிளையாடல்கள்
கடந்த 15ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் லீலை நிகழ்ச்சிகள் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது என 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார் இறைவன் சிவபெருமான். தனது பக்தர்களுக்கு அருள் தரவே அவர் திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இந்த திருவிளையாடல்களை நினைவு கூறும் வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன.

சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அம்மன் ஆட்சி. சித்திரை மாதம் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஆவணி மாதம் முதல் சித்திரை மாதம் வரை மதுரையில் சொக்கநாதர் ஆட்சி நடைபெறும். இன்று சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்
முன்னதாக இன்று காலை வளையல் விற்ற லீலை நடைபெற்றது. நாளைய தினம் நரிகளை பரிகளாக்கிய லீலை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23ஆம் தேதி நடைபெறுகிறது. ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் ஆரப்பாளையத்தில் உள்ள புட்டு சொக்கநாதர் ஆலயத்தில் புட்டு திருவிழா நடைபெறும். அன்று மட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

புட்டுத்தோப்பில் திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள உற்சவ வந்தியம்மை இங்கு வந்து அலங்காரம் செய்து, முக்தி பெற்று பூப்பல்லக்குடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும். இத்திருவிழாவிற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரும், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரியாவிடை, மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரரும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகரும் வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மூல வீதிகளில் உலா
24ஆம் தேதி விறகு விற்ற லீலை நடைபெறுகிறது. 25ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சட்டதேரில் ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 26ஆம் தேதி பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications