மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்... தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
மதுரை அரசாளும் மீனாட்சிக்கு இன்று சொக்கநாதருடன் திருக்கல்யாணம்.... மீனாட்சி திருக்கல்யாணத்தை மதுரை மாநகரமே கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
மதுரை: நான்மாடக்கூடலில் ஆட்சி செய்யும் மீனாட்சி அன்னைக்கு திருமணம் என்றால் சும்மாவா? மதுரை மாநகரமே கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அம்மை அப்பனை வணங்கி பெண்கள் திருமாங்கல்யம் மாற்றிக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
Recommended Video
மதுரை சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினம் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன் ஆடி வீதிளில் எழுந்தருளி அருள்பாலித்தார். எட்டாம் நாளன்று பட்டாபிஷேகமும், ஒன்பதாம் நாளன்று திக் விஜயமும் நடைபெற்றது.
பத்தாம் நாளான இன்றைய தினம் மிக முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணம் என்றாலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. திருக்கல்யாணம் முடிந்து தம்பதி சமேதராக அருள்பாலித்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண உற்சவம்
கோவிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உற்சவர் சன்னதியில் இருக்கும் திருவாட்சியில் உள்ள 108 விளக்குகள் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார்.
புது மணத்தம்பதிகள்
பட்டுப்புடவை உடுத்தி மணப்பெண்ணாய் காட்சி அளித்தார் மதுரை மீனாட்சி வைரகிரீடம் சூடி, மரகத மூக்குத்தி, வைர மாலை மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன. சுந்தரேசுவர பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை சிவப்பு பட்டும் உடுத்தி மணமேடையில் எழுந்தருளினர்.
பரிவட்டம்
மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை பட்டர்கள் செய்தனர். அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் சுந்தரேசுவரர் பிரதிநிதியாக ஒரு பட்டரும், மீனாட்சியின் பிரதிநிதியாக மற்றொரு பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். சுந்தரேசுவரருக்கு வெண் பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டு புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன.
முப்பத்து முக்கோடி தேவர்கள்
அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தேவயானி சகிதம், பவளவாய் கனி பெருமாள் ஆகியோர் எழுந்தருளுவார்கள். இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்கள் புடை சூழ, பவளவாய் கனி பெருமாள், தனது தங்கை மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்து திருமணம் செய்து வைப்பார். இந்த ஆண்டு பவளக்கனிவாய் பெருமாளும், சுப்ரமணிய சுவாமியில் மதுரைக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
வைரக்கற்கள் பதித்த திருமாங்கல்யம்
வைரக்கற்கள் பதிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை பட்டர்கள் காண்பித்தார்கள். வேதமந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது பெண்கள், புதிய மங்கல நாண்களை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெண்கள் அனைவரும் வீட்டிலேயே ஆன்லைனிலும் தொலைக்காட்சிகளிலும் தரிசனம் செய்து விட்டு புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்கள் வரிசையில் நின்று தம்பதி சமேதராக காட்சி அளித்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர்.