மாட்டுப்பொங்கல் தமிழக கிராமங்களில் கோலாகலம் - கோவில்களில் நந்திக்கு அலங்காரம்
சென்னை: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழக கிராமங்களில் வீடுகள் தோறும் கால்நடைகளை அலங்கரித்து பொங்கலிட்டு படையல் வைத்து வழிபட்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் விழா தமிழகம் முழுவதும் களை கட்டியுள்ளது.
மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, கழுத்தில் புதிய கயிறுகள் கட்டியும், மணிகள் கட்டியும் அலங்கரித்தனர். மாட்டு கொட்டகைகளை அலங்கரித்து பொங்கலிட்டு படையல் வைத்து வழிபட்டனர்.
வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளைக் குளிப்பாட்டி அலங்கரிப்பதுடன், அவற்றுக்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர். அவற்றுக்கு பொங்கலும், பழங்களும் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
விவசாய கருவிகள்
மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. மாட்டுத் தொழுவங்களும், உழவுக் கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற்றன.
கால்நடைகளுக்கு நன்றி
தமிழகம் முழுவதும் கிராமங்களில், இரண்டு ஆண்டுக்கு பிறகு விவசாயம் செழிப்படைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்த விவசாயிகள் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டனர். பசு, காளை, எருமை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட்டனர்.
மாடுகளுக்கு வழிபாடு
தூத்துக்குடி மாவட்டம் புசிப்பாளையத்தில் உள்ள மாட்டுப்பண்ணைகளில் பொங்கலிட்டு வழிபாடு நடததப்பட்டது. மாடுகளை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளை மாடுகளுக்கும் ஊட்டி விட்டு வழிபாடு நடத்தினர்.
கோ பூஜை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் பாண்டுரெங்கன் ஆலயத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு 600 பசுக்களுக்கும் ஒரே நேரத்தில் கோபூசை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பண்டரிபுரம் கோவிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் உள்ள கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இம்மாடுகளுக்கு தம்பதி சமேதராக நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்தினர். மாடுகளுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, மலர்களால் அலங்கரித்தனர். கற்பூர ஆரத்தி காட்டிய பின்னர் பொங்கல், பழங்களை வழங்கினர்.
தஞ்சையில் நந்திக்கு அலங்காரம்
சென்னையில் உள்ள சிவ ஆலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலலேஸ்வரர் திருக்கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. தஞ்சை பிரகதீஷ்வரர் ஆலயத்தில் நந்திக்கு ஆயிரம் கிலோ பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதானைகள் நடைபெற்றது.