உங்கள் குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வியாசர்பாடி வாங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: ஆனி மாத பௌர்னமியான இன்று வியாச பூஜை அனுஷ்டிக்க படுகிறது. சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவீஸ்வரர் கோயிலில் வேதவியசாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்கப்பட்டார்.
வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.
வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.
வியாச பூஜை:
இந்த வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.
அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீ சுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, தம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.
வேதத்தின் நான்கு பிரிவுகள்:
வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.
வேதத்தின் அங்கங்கள்:
சப்த சாஸ்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி சீரோத்ர முக்தம் நிருக்தம்.கல்பஹகரெள, யாதுரஸ்ய வேதஸ்ய, ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெள புதைஹி" என 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதமேதை "பாஸ்கராசார்யான்" குறிப்பிட்டு உள்ளார்.
வேத புருஷனின் முகம் இலக்கணம், கண்கள் "ஜோதிஷம்", செவிகள் நிருக்தம், கைகள் கல்பம், சிக்ஷை அவனது மூக்கு, சந்தஸ் அவன் இரண்டு கால்கள் ஆகும், மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் "ஜோதிஷம்" முக்கியம், "ஜோதிஷம்" எவ்வளவு அவசியம் ஆனது என்பதை எடுதுரைக்கிறது.
சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. நம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
சூரியனை சுற்றி இருக்கும் கிரஹங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களும் மனிதனுக்கு "தனிப்பட்ட வாழ்வியலினின் மாறுதலை நுணுக்கங்களை கண்டு எடுத்துரைப்பதே "ஜோதிஷம்" ஆகும்.
சூரியனும் ஜோதிடமும்:
சூரியன், கிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. உலகின் இயக்கம் அவன் வசம். ‘முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவமாகத் திகழ்கிறான்' என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே). கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா).
‘உலகின் அணையா விளக்கு' என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம்.
சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம்.
குரு பூர்னிமா:
குரு பூர்னிமா எனப்படும் வியாச பூர்னிமாவானது சூரியன் ஆஷாடம் எனப்படும் ஆனி மாதத்தில் புதனின் மிதுனராசியிலும், சந்திரன் குருவின் தனுர் ராசியிலும் இருந்து சமசப்தமமாக பார்க்கும் காலமாகும். குருவிற்க்கும் வித்யாகாரகன் புதனுக்கும் சூரிய சந்திரர்கள் ஏற்படுத்தும் தொடர்பே குருபூர்னிமாவாகும்.
வியாசபகவான் திருக்கோயில்:
இத்தகைய சிறப்பு மிக்க வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. சூரியனின் நாளில் வியாச பூர்னிமா அமைந்துள்ள நிலையில் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்கி நல்லருள் பெற்று நலம்பல கண்டு உய்வோமாக.