சமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழா ரத்து - மகா அபிஷேகம் ஆன் லைனில் லைவ்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்த பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால். தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலத்தில் நடத்தப்படும் அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்த பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்களின் வேண்டுதல் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில், வரும் மே 14ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அதிகாரபூர்வ இணையதளமான www.samayapurammariammantemple.org மற்றும் www.tnhrce.gov.in ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
நாட்டில் எத்தனையே அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுக்கெல்லாம்,முதன்மையானதும், தலைமை பீடமாகவும் விளங்குவது திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தான். அதோடு, தமிழ்நாட்டிலுள்ள சக்தி தலங்களில் மிகப்பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில் தான்.
தமிழ்நாட்டின் நடுநாயகமாக உள்ள திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மனை மனமுருகி வேண்டிக்கொண்டால் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தும் விலகி ஓடும் என்பது பக்தர்களின் முழு நம்பிக்கையாகும். அன்னை ஆதிபராசக்தியே மாரியம்மனாக இங்கு வீற்றிருந்து, தன்னை நாடி ஓடிவரும் பக்தர்களுக்கு தாயாக இருந்து துயர் துடைக்கின்ற காரணத்தால் தான், தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் நாள் தோறும் பக்தர்கள் அதிக அளவில் இக்கோவிலுக்கு வருகை தருவதுண்டு.
அழகர்கோவிலில் தங்கக்கருட வாகனம் எழுந்தருளிய கள்ளழகர் - மண்டூக மகரிஷி சாப விமோசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறம் திருவிழாக்களில் முக்கியமானது, பூச்சொரிதல் விழா, சித்திரை மாத தேரோட்ட விழா மற்றும் தெப்பத் திருவிழா மற்றும் பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழாவும் தான். பங்குனி மாதத்தில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயத்தில் தான், பூச்சொரிதல் விழா நடைபெறும்.
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கையாக போற்றி வணங்கப்படுவதால், பூச்சொரிதல் விழா நடைபெறும் சமயத்தில், அம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது. அதே போல், சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் தேரோட்ட வைபவத்தின் போது, பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் கொண்டுவருவது வழக்கம்.
இக்கோவிலில் நடைபெறும் ஐந்து உற்சவ விழாக்களில் முக்கியமானது, வசந்த காலத்தின் தொடக்க மாதமான சித்திரை மாதத்தில் நடைபெறும் பஞ்சப்பிரகாரம் எனப்படும் வசந்த உற்சவ விழா ஆகும். இது கோடையின் உக்கிர காலமான அக்னி நட்சத்திரம் நடைபெறும் சமயத்தில் அக்னி நட்சத்திர வெய்யிலின் தாக்கத்தை தணிப்பதற்காக நடைபெறும் விழாவாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு வசந்த உற்சவ விழா கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி வரும் 22ஆம் தேதி வரையிலும் நடத்த கோவில் நிர்வாகம் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் உக்கிரமாக உள்ளதால், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், வழக்கமாக கோடை காலத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவும், சித்திரை திருவிழா மற்றும் தேரோட்ட விழாவும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டன.
தற்போது, பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்களின் வேண்டுதல் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில், வரும் மே 14ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக வந்து அபிஷேகத்தை காண அனுமதி கிடையாது. வீட்டில் இருந்தே இந்நிகழ்ச்சியை நேரடியாக கண்டு தரிசனம் செய்யும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அதிகாரபூர்வ இணையதளமான www.samayapurammariammantemple.org மற்றும் https://tnhrce.gov.in/ ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.