சனி பெயர்ச்சி.. ஏழரை சனி.. அஷ்டமத்து சனி.. கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்.. ஈஸியா பண்ணலாம்
சென்னை: சனி பகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்க.. சனி தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை, அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகளை வகுத்துள்ளனர்.
நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி என்பனவாம். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பார்கள். எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும்.

ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.
நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது" என்று சொல்லி திட்டுவார்கள்.
எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும்.
பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள். சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை, அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும். எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண வேண்டும். சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வபத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள் செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.
சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை" என்றும், "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?' என்று கேட்டான். அதற்கு சனி பகவான், "நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது" என விளக்கம் சொன்னார். 'அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு' என்று தேவேந்திரன் வேண்டினான்.
சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, 'உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா' என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, 'நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே. அதுகூட என்னால் ஏற்பட்ட தோஷத்தினால்தான் என்று சொல்லி விட்டு சிரித்தார்.
சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மந்திரம் கூறி வழிபடலாம்.
நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications