செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. வேலையில் புரமோஷன், திடீர் வருமானம் யாருக்குக் கிடைக்கும்?
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு வேலையில் மாற்றம் கிடைக்கப்போகிறது. சிலரது வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் நிகழப்போகின்றன. இந்த மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். செப்டம்பர் மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
அதிமுக 3 முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு ஜம்ப்? எம்பி ட்வீட்.. பரபரக்கும் அரசியல்
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமாக இருந்தாலும் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண சுபகாரியம் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் நிதானமாக இருப்பது அவசியம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல காலம் கை கூடி வருகிறது. இல்லத்தரசிகள் நிதானம் தேவை. சமையல் அறையிலோ, வேலை செய்யும் இடத்திலோ விழிப்புணர்வு அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற கோபத்தை குறைக்கவும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.
மகரம்
அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. எதற்காகவும் கவலைப்படாதீர்கள். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மன தைரியத்தை அதிகரித்துக்கொள்வீர்கள். ஜென்ம சனி இரண்டாம் வீட்டில் குரு இருப்பது சிறப்பு. பாக்ய ஸ்தானத்தில் உள்ள புதனுடன் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. ராசியில் உள்ள சனிபகவான் ஏழாவது வீட்டினை பார்ப்பது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சில நேரங்களில் போர்க்களமாக இருக்கும். கோபமான பேச்சுக்களைக் கட்டுப்படுத்தவும். குருபகவான் மூன்றாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம செய்கிறார். பண விவகாரங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம். குடும்பத்தில் திடீர் பணத்தேவை ஏற்படும். சமூகத்தில் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குருவின் பார்வையால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய பதவிகள் வந்து சேரும்.
கும்பம்
செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் உங்கள் பயணங்களில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். புது வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள். வேலையில் பளு அதிகரிக்கும். இருக்கிற வேலையை கவனமாக செய்வது நல்லது. தொழிலில் புதிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரை சனி கொடுக்கும் படிப்பினைகளை ஏற்க தயாராகுங்கள். 2ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் பேசும் போது கவனம் அவசியம். குரு, சனி, புதன் வக்ர நிலையில் பயணம் செய்வதால் திருமண முயற்சிகள், புது வண்டி வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். அதே நேரத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட முயற்சி செய்யலாம்.
மாணவர்களுக்கு இது நல்ல மாதம், வெளியூர் சென்று படிக்கத் தயாராவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் அவசியம். இந்த மாதம் அதிக விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.
மீனம்
ராசியில் குரு பயணம் செய்கிறார். 2ஆம் வீட்டில் ராகு மூன்றாம் வீட்டில் செவ்வாய். ஆறாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ஏழாம் வீட்டில் புதன், எட்டாவது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. மாணவர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும். உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். குருவின் ஆதரவு குடும்பத்தில் குதூகலத்தைத் தரும்.
குடும்பத்தில் சுகம் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். நிறைய பண வரவு அதிகரிக்கும். 3வது வீட்டில் உள்ள செவ்வாய் நிறைய தைரியத்தை ஏற்படுத்துவார். அலுவலகத்தில் வேலை விசயத்தில் கவனம் தேவை. எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை மாற்றங்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன விரிசல்கள் வரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. செப்டம்பர் மாதத்தில் குரு வக்ரம், சனி வக்ரம், புதன் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். கிரகங்கள் சாதகமாகவே உள்ளன. வேலை விசயத்தில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். செவ்வாயின் பார்வை பத்தாவது வீட்டிற்கு கிடைப்பதால் வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம். பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் தேவையின்றி வாக்கு தர வேண்டாம். தேவையில்லா விசயத்தை பேச வேண்டாம். இல்லத்தரசிகளிடையே பொறுப்புகள் அதிகரிக்கும். ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது கவனம் தேவை. வக்ரமடைந்த குருவும், புதனும் உங்களுக்கு தடைகளை விலக்குவார்கள். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாட்டிற்கு சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும். குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் பிள்ளைகளுக்கு சுப காரியம் உண்டாகும்.