செவ்வாய் கிழமையில் மவுன விரதம் இருங்க யாகம் செய்த பலன் கிடைக்கும்
தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது
சென்னை: மிகப்பெரிய அரசியல் பேச்சாளர், இலக்கிய பேச்சாளர், தமிழ் அவரது நாவில் அருவி போல கொட்டும். ஒருமுறை அவரை பேட்டி காண்பதற்காக சென்ற போது செவ்வாய்கிழமை மவுன விரதம் இருப்பதாகவும், அந்த நாள் தவிர்த்து எந்த நாள் வேண்டுமானாலும் பேட்டி தருவதாகவும் கூறினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மவுன விரதம் இருப்பதாகவும் இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக நன்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
நாளைய தினம் செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி. இந்த நாளில் மவுன விரதம் இருப்பதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். செவ்வாய்க்கு தெற்கு திசை யோக திசையாகும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக அசுப கிரகங்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும், கடகத்தில் நீசமும் பெறுகிறார். சிம்மம், தனசு, மீனம் முதலியவை நட்பு ராசிகளாகும். கன்னி, மிதுனம் முதலியவை பகை ராசிகளாகும்.

ஆற்றல் நாயகன் செவ்வாய்
இயற்கையில் செவ்வாய், எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். ரத்த காரகன் சகோதரகாரகன் செவ்வாய். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய். பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர்.

ரத்தம் தொடர்பான நோய்கள்
செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத் தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.

மங்கள்வாரம்
செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள். ஆகையால் செவ்வாய்க் கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. இங்கு நாம் செவ்வாய்க்கிழமையை தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

பூமி பூஜை போடலாம்
செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன. செவ்வாய்க் கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும். இந்த நாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமி பூஜை போடலாம். வீடு மாறலாம். புது வீட்டில் பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்குக்கூட வாய்ப்புண்டு.

செவ்வாய் மவுன விரதம்
தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அதாவது, செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாய் வெறும்வாய் 'செவ்வாய் வெறும் வாய் ' என்ற பழமொழி புழக்கத்தில் உள்ளது. இதற்குக் காரணம் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும் என்பது நம்பிக்கை.

பதவி கிடைக்கும்
குரு மங்கள யோகம், ருச்சுக யோகம், பிருகு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம், ஆகியவை செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் யோகம். செவ்வாய் ஆட்சியோ, உச்சமோ பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது ருச்சுக யோகம். இதனால் நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி மற்றவரைவழி நடத்தும் அமைப்பு உண்டாகும். குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது குருமங்களயோகம் இதனால் வீடு, மனை, வண்டி, வாகன யோகம், நீண்ட ஆயுள்யாவும் சிறப்பாக அமையும்.

வீடு மனை யோகம்
சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது பிருகுமங்களயோகம். இதனால் வீடு, மனை, வண்டி வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். சந்திர மங்கள யோகம் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகம். இதனால் வீடு மனை, செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications