ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் தை தேரோட்டம் - 22ல் கருடசேவை,27ல் திருத்தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி நேற்று தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா நேற்று காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 29-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய அம்சமாக 22ஆம் தேதி கருடசேவையும், 27ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். அதுமட்டுமல்லாமல், 108 திவ்யதேசங்களிலேயே 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற கோவிலும் ரங்கநாதர் கோவில் தான். மேலும் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தான் என்பதும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
108 திவ்யதேசங்களிலேயே முதலாவது திவ்யதேசம் மற்றும் பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படுவதாகும். இதனால் தான், வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த ஆண்டிற்காக தை தேரோட்ட விழா தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முகூர்த்தக்காலை இணை ஆணையர் அசோக்குமார், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.
தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரைவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார்.
வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 22ஆம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும்,23ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும் நம்பெருமாள் உலா வருகிறார். 24ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.
வருகிற 25ஆம் தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 26ஆம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.
28ஆம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
நிறைவு நாளான 29ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.