வைகையில் இறங்கும் கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை மதுரை கொண்டு செல்லப்பட்டது.
Recommended Video
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறதாம்.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் போது, ஆண்டாள் மாலை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணத்துக்கான பட்டுப் புடவை வருகிறது. ஆண்டாளுக்கு பெருமாளுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கிறது.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்... புது தாலி மாற்றிய பெண்கள் - களைகட்டும் விருந்து
ஆண்டாள் மாலை
ஒவ்வொரு வருடமும் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை சூடிக்கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
பலநூறு வருட பந்தம்
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கும் கள்ளழகர் நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் அணிந்து கொண்டுதான் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார். இது பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் நிகழ்வாகும்.
கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை
நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கள்ளளகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.முன்னதாக இன்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் ஆண்டாளுக்கு மாலை கிளி பரி வட்டங்கள் அணிவிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
ஆண்டாள் சூடிய மாலை கிளி பரிவட்டம் ஆகியவை எடுத்து கூடையில் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைமீது வைத்து கோவில் பிரகாரத்தில் உள்ள வெளிபுறத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் கோவில் பட்டர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை காரில் எடுத்து மதுரைக்கு கொண்டு சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமும் ஒன்று! ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். மேலும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம். துளசி வனத்தில் அவதரித்தவர்.
ஆண்டாள் செய்த காரியம்
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் பறித்த பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு அணிவிப்பார்.
பெருமாளுடன் ஐக்கியமான ஆண்டாள்
ஒருநாள் இறைவனுக்கு கட்டிய மாலையில் ஒரு நீளமான தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை மாலையாக கட்டி பெருமாளுக்கு சூட்டினார். உடனே இறைவன், கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்தார். இறைவனையே விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். எனவேதான் இன்றைக்கும் பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது.