சந்திர கிரகணம் - ஜூலை 27ல் திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணிநேரம் நடை மூடல்
ஜூலை 27ஆம் தேதி வரும் முழுச் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஜூலை 27ஆம் தேதி மாலை 5 மணி முதல் 28ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27ஆம் தேதி வரும் முழுச் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணமாகும் எனக் கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 27ஆம் தேதி பவுர்ணமி நாளின் இரவில் முழுச் சந்திர கிரகணம் வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தெரியும் இந்தக் கிரகணம் இருபத்தோராம் நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் எனக் கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிப்பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.

27ல் தொடங்கி 28வரை கிரகணம்
கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 27 இரவு 11:54மணிக்குக் கிரகணம் தொடங்குகிறது. நள்ளிரவில் 1:52மணிக்கு நிலவு முழுவதும் மறைக்கப்பட்டுக் காரிருளாகத் தோன்றும். முழுக் கிரகணம் 2:43மணி வரை நீடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக விலகி 28ஆம் தேதி அதிகாலை 3:49மணிக்குக் கிரகணம் முடிந்துவிடும்.

பவுர்ணமி கருட சேவை ரத்து
கிரகணம் நடைபெறும் பொழுது 6 மணி நேரத்திற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும். இந்த முறை ஜூலை 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மூடப்படுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்படுகிறது.

ஏழுமலையான் தரிசனம்
28ஆம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் 4.15 மணிக்கு சுப்ரபாத சேவை நடைபெறும். காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். 28ஆம் தேதி தோமாலை, கொலு, பஞ்சாங்கம் படித்தல் போன்றவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும்.

முருகன் கோவில் நடை மூடல்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல ஆலயங்களும் பவுர்ணமி பூஜைகள் நடத்தப்பட்டு இரவு நேரத்தில் விரைவாகவே நடைகள் அடைக்கப்படுகின்றன. திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட ஆலயங்களில் ஜூலை 28ஆம் தேதி அதிகாலையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications