தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்
புகழ்பெற்ற வைத்தீஸ்வரன்கோவில் வைத்திய நாத சுவாமி ஆலயத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்குவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில், கோவில் நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்று குடமுழுக்கு விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.
தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் திருப்புள்ளிருக்குவேளூர் என்று பாடப்பெற்ற தலம் தற்பொழுது வைதீஸ்வரன் கோவில் என்று
அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை புள் (ஜடாயு, சம்பாதி), ரிக்வேதம் (இருக்கு), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.
இறைவன் மருத்துவராய் வைத்தியநாத சுவாமியை இருந்து அருள்பாலிக்கும் தலம். முருகப் பெருமான், செல்வ முத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன் அருள்பாலிக்கும் தலம், நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் தலமாகவும் போற்றப்படுகிறது.

தையல் நாயகி அம்மன்
பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், உள்ளது. இந்த ஆலயத்தின் வில்வத்தடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபடலாம்.

நோய் தீர்க்கும் ஆலயம்
இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர். இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் கொண்டது. நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும்.

குடமுழுக்கு விழா
தீராத வியாதிகளையும் தீர்க்கின்ற இந்த ஆலயத்தில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 25 ஆம் தேதி 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து இன்று காலை 8 ஆம் கால யாக பூஜைக்குப் பின், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்கவில்லை
பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வைத்தீஸ்வரன்கோவில் 4 ரத வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மடவிளாகம், சன்னதி தெரு உள்ளிட்ட நான்கு ரத வீதிகளில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது எனவும், மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு
பொதுமக்கள் யாரும் இன்று கோயிலுக்கு தரிசனம் செய்ய வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த குடமுழுக்கை பார்க்கும் வகையில் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தருமபுரம் ஆதீனத்தின் யூடியூப் சேனலிலும், பொதிகை டிவி மற்றும் அதன் யூடியூப் சேனலிலும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications