சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார் - சுக்கிர திசையில் பணமாக கொட்டுமா?
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும் என்பது பழமொழி. சிறு வயதில் சுக்கிரதிசை நடந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே இந்த பழமொழி சொல்லி வைத்திருக்கின்றனர்.
சென்னை: குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றால் குழந்தைப் பருவத்தில் வரும் சுக்கிர திசை ஆகாது.பயன் தராது என்று பெரும்பாலான சோதிடர்கள் சொல்கிறார்கள். சுக்கிரன் அள்ளிக்கொடுப்பது யாருக்கு, அலைச்சலை தருவது யாருக்கு என்று பார்க்கலாம்.
சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.
பரணி-பூரம்-பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம திசையே சுக்கிர திசையாக வரும். அசுவினி-மகம்-மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும் இதனால் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த குடும்பத்துக்கு பாதிப்பு வரும் என்பது பலரது கருத்து. இதை சில ஜோதிடர்கள் கூறினாலும் அப்படி எதுவும் வராது என்பதே கருத்து.
சனியின் புத்திரனான குளிகன் களத்திர காரகனான சுக்கிரனுடன் ஆண் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் அவருக்கு அமையும் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை வர அதிக வாய்ப்பு உள்ளது என்பதையே 'குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்' என்ற ஜோதிட பழமொழி சொல்கிறது என்பதையே ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் பண வரவுகளுக்கும் பஞ்சாமிருக்காது. கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு. நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூவமற்ற நிலை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
சுக்கிரன் தனித்து நிற்காமல் பாவ கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அது போல சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை ரீதியாக பிரச்சனைகளை உண்டாகும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். கண்களில் நோய் தவறான பெண்களின் சேர்க்கையால் பாலியல் நோய்களுக்கு ஆளாக கூடிய நிலை, மர்ம உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை வியாதி, போன்றவை ஏற்படும்.
சுக்கிரன் நீசம்
சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது. அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம் என்ன?
சுக்கிர திசை சுக்கிர புத்தி நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கஷ்டம் துக்கம், பிரிவு, சண்டை சச்சரவும் நாடோடியாக திரியும் அவலம் உண்டாகும். சுக்கிர திசை நடக்கும் காலத்தில் வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நன்மை தரும். மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். விரலில் வைரக்கல்லை அணியலாம்.