சித்தர்கள் வழிபடும் பெரிச்சிகோவில் நவபாஷாண பைரவர் - திருமண தடைகளை நீக்கும் ஒற்றை சனீஸ்வரர்
காசியில் இருந்து வந்த போகர் என்னும் சித்தர், இந்த பைரவர் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, இந்த பைரவர் சிலையையும் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை: பைரவர் வழிபாடு என்பது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. காசியில் உள்ள பைரவர் போலவே காட்சி அளிக்கும் பெரிச்சிகோவில் காசி பைரவர் நவபாஷணங்களால் வடிவமைக்கப்பட்டவர். இந்த பைரவர் பழனி முருகனைப்போலவே காட்சி அளிக்கிறார். இங்குள்ள ஒற்றை சனீஸ்வரரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வரப்பிரசாதியாக காட்சி அளிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த இந்த பைரவர், போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்டவர். பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, இந்த பைரவர் சிலையும் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளது.
நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும் பழனிமலை தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது. பழனி முருக திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. தங்கத்தைப் புடம் போடுவது போல் சித்தர்கள் இந்த நவ பாஷாணங்களைப் புடம் போட்டு அதன் மூலமாக எல்லாவற்றையும் செய்தனர்.
தப்பு தப்பா பேப்பர் விளம்பரம்.. ஏன் இப்படி பொய்யா சொல்றீங்க.. யோகி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
சித்தர் வடிவமைத்த சிலைகள்
நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகிறது என்று சித்தர்கள் கூறினார்கள். ஆகவே பல சித்தர்கள் நவ பாஷாணங்களைப் புடம் போட்டு பல தெய்வ விக்ரகங்களை செய்தனர். பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் எனும் சித்தர் வேட்கோவர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் காலாங்கி முனிவரின் மாணவர். இறை ஆற்றல்,ப்ரபஞ்ச தத்துவம்,உயிர்தத்துவம் ,அனைத்தையும் ஆராய்ந்து அதன் முடிவாக பல நோய்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவ முறைகளைக் கண்டறிந்தார். இவர் எழுதிய வைத்திய நூல்களில் வைத்திய சூத்திரம், நிகண்டு, துவாதகாண்டம், சப்பகாண்டம் மற்றும் ஆன்மீகநூல்களில் ஞானசூத்திரம்,அஷ்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவை முக்கியமானவை.
நவபாஷாண சிலைகள்
போகர் சித்தர் நவபாஷாணங்களைப் புடம் போட்டு சேர்த்து மூன்று நவ பாஷாண சிலைகளை உருவாக்கினார். பழனி மலையில் குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி சிலை இவரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலைதான். மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைமலைச் சரிவில் உள்ள பூம்பாறை என்னுமிடத்தில் குழந்தை வேலப்பர் கோவிலில் இருக்கும் குழந்தை வேலப்பர் சிலையும் இவரால் செய்யப்பட்ட சிலைதான். பெரிச்சிகோவில் பைரவர் சிலையும் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளது. பழனி முருகனின் சிலையைச் செய்வதற்கு முன்பாகவே இந்தச் சிலையை போகர் செய்ததாக செவி வழி செய்தி கூறப்படுகிறது. இந்த சிலையை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்தர்கள் வணங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஆயுதங்களுடன் பைரவர்
காசி பைரவர் நிர்வாண கோலத்தில் கபால மாலை அணிந்து காட்சி தருகிறார். எட்டு கரங்களிலும் தீமைகளை அழிக்கும் ஆயுதம் ஏந்தி காட்சி அளிக்கிறார். ஒரு கரத்தில் அரக்கனின் தலையை வெட்டி ஏந்திக்கொண்டுள்ளார். அதில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த அதை பைரவரின் வாகனமான நாய் சுவைத்துக்கொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளிலும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
சனிதோஷங்கள் நீங்கும்
இந்த நவபாஷாண பைரவரை வழிபாடு செய்வதற்கு பூர்வ புண்ணிய பலன் அவசியம் என்கிறார்கள். பைரவரின் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபடுவது சிறப்பு. ஆறு பரணி நாட்களில் ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது பிணிகளை போக்கும். ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நீங்கும் . பைரவர் பயத்தை போக்க கூடியவர். எப்பேற்பட்ட தீராத தோஷங்களும் பைரவ வழிபாட்டால் தீர்த்து விடும். ஓம் க்ரீம் மஹா பைர வாய நமஹ என்கிற மந்திரத்தை ஒரு சனிக்கிழமையில் 108 முறை சொல்லி பைரவ வழிபாட்டை தொடங்கலாம். இந்த பைரவரை வழிபட்டால் சனி தோஷம், பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாவங்கள், நீண்டகால நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரரின் குரு
சனீஸ்வரனின் வாத நோயை பைரவர் குணப்படுத்தியதால் பைரவர் சனீஸ்வரரின் குருவாகிறார். இந்த பைரவர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாத்தப்படும் வடை மாலை போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை. அவற்றை கோவிலின் மேல் பகுதியில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பறவைகள் கூட உண்பதில்லை. ஏனெனில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் வீரியம் அதிகம் என்கிறார்கள்.
மங்குசனி பாதிப்பு போகும்
இங்குள்ள ஒற்றை சனீஸ்வரரை 11 முறை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. கி.பி.13ம் நூற்றாண்டில் மங்குச்சனியால் பாதிக்கப்பட்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னர், கதம்பவனம் எனப்படும் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தார். இங்கு பெருகி ஓடிக்கொண்டிருந்த மணிமுத்தாறில் நீராட எண்ணி, ஆற்றில் இறங்கிக் கால் நனைத்தார். அப்போது, அரசரின் கையிலிருந்த பொற்கிண்ணம் தவறி, ஆற்றுக்குள் மூழ்கியது. மன்னரோடு வந்த படை வீரர்கள் நீரில் குதித்து, பொற்கிண்ணத்தைத் தேடி எடுக்க முற்பட்டார்கள். அங்கே, சிவபெருமான் சுயம்புலிங்கமாக நீருக்கடியில் படை வீரர்களுக்குக் காட்சி தந்தார். காவலர்கள் மூலம் செய்தி அறிந்த மன்னர், இப்படி நடந்தது மங்குச்சனியின் பாதிப்பில் இருந்து தாம் விடுபட ஈசன் நடத்திய திருவிளையாடலே என்பதை உணர்ந்து, அந்த இடத்தில் ஈசனுக்குக் கோயில் கட்டி, சுகந்தவனேஸ்வரர் என்ற பெயரில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததுடன், வன்னி மரத்தின் அடியில் ஒற்றைச் சனீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சனி பகவானையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். தமிழகத்திலேயே வன்னிமரத்தடியில் ஒற்றைச் சனீஸ்வரராய், சனிபகவான் அருள்பாலிப்பது இங்கு மட்டும்தான் என்பது, இந்த க்ஷேத்திரத்தின் தனிச்சிறப்பாகும்.
தடைகள் நீங்கும்
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெரிச்சிக்கோவில். இங்கு சென்றால் நவபாஷாண பைரவரையும், ஒற்றை சனீஸ்வரரையும் தரிசனம் செய்து வரலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனிக்கு ஆளாகி, நோய்களாலும், கடன்களாலும், பகைவர்களாலும் ஒருவர் துன்பப்பட்டால், அவர் இந்தத் திருத்தலத்துக்கு வந்து வேண்டி, எள் விளக்கேற்றி வழிபட, துன்பங்களின் தாக்கம் குறையும் திருமணத் தடை உள்ளவர்கள் கறுப்பு வஸ்திரம் சாத்தி வழிபட திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.