கோவிந்தா..திருமலையில் 6 கி.மீ க்யூ..ஏழுமலையானை தரிசிக்க 48 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்
சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசன வரிசை ஆறு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நீண்டுள்ளது. மழையிலும் கடும் குளிரிலும் காத்திருக்கும் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா முழக்கம் மலையில் எதிரொலிக்கிறது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் முடிந்து விட்டது. புரட்டாசி மாத விழாக்கள் நடைபெற்று வருகினறன. புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்தே திருமலைக்கு படையெடுத்துள்ளனர் தமிழக பக்தர்கள்.

48 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதியில் 48 மணி நேரம் காத்திருக்கிறார்கள் பக்தர்கள். 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து, வெளியே ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் உள்ளதால் பொறுமை காக்குமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
நாராயண கிரி கார்டனில் இருக்கும் அனைத்து அறைகளும் பக்தர்களால் நிரம்பிய நிலையில் வரிசை வெளியே தொடங்கி நேற்று காலையிலேயே சிலா தோரணம் வரை நீண்டது. உணவு, தண்ணீர் என பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

மழை + குளிர் காற்று
திருமலையில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் குளிரில் நடுங்கியபடியே நிற்கிறார்கள். அவ்வப்போது பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா முழக்கம் மலைப்பகுதியில் எதிரொலிக்கிறது. பக்தர்களுக்கு கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு ,தண்ணீர் , அடிப்படை வசதிகள் தேவஸ்தானம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

லட்சக்கணக்கான பக்தர்கள்
பாதையாத்திரையாக வரும் பக்தர்களும், விரைவு தரிசனத்தில் வரும் பக்தர்களும் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். நேற்று முன்தினம் 72 ஆயிரத்து 195 பேர் தரிசனம் செய்துள்ளனர். 41 ஆயிரத்து 71 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 2 .17 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications