சிம்மத்துக்கு கடவுள் பாதி மிருகம் பாதி.. குருவின் அருளால் அதிர்ஷ்டம்.. ராகுவால் வரும் கண்டம்.. உஷார்
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் சிம்ம ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் சிம்ம ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி சூரியனை அம்சமாக பெற்ற ராசி. சகல வித்தைகளை செய்து பார்த்தாலும் பலன் தராத நேரமாக இருக்கும். இதுபோன்ற கலக்கம் உங்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவதொன்று அடைவதற்காகப் போராடுவது, அதனை தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடுவது போன்ற மனநிலை இருக்கும். 8 ஆம் இடத்தில் அஷ்டமசனியாக சனி பகவான் இருக்கிறார்.
ராகு 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியில் பார்க்கிறார். உங்களுக்கு எதிரியாக இருக்கும் நபர் ஒருவர் உங்கள் அருகிலேயே இருப்பது போன்ற நேரமாக இருக்கும். 7 இல் ராகு இருந்தாலும் குரு பார்க்கிறார். அக்டோபர் மாதம் 18 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை குரு கடகத்துக்கு வருகிறார். மீண்டும் மிதுனத்துக்கு போகிறார். ராசி மேல் கேது அமர்ந்திருக்கிறார். இந்த 4 கிரகங்களாலும் பிரச்சனை ஏற்படுமா என்றால் இல்லை. குரு பார்க்கும் இடங்களில் எல்லாம் எந்தவொரு பிரச்சனையும் வராது.
முயற்சிகளில் வெற்றி
முயற்சி ஸ்தானத்தை குரு பார்க்கிறார். அதனால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். முயற்சியில் வெற்றி பெறும் உத்திகளைக் கற்றுக் கொள்வீர்கள். குருவே அஷ்டமாதிபதியாக வந்து, லாப ஸ்தானத்தில் அமர்ந்து, முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் அமோகமான வெற்றியைக் காண்பீர்கள். எண்ணங்களை சீராக்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன் சொந்த வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நம்பிக்கை, மனதைரியம், மனத்திடம் உண்டாகும்.
அருமையான காலகட்டம்
7 ஆம் இடம் நன்றாக இருந்தால் நல்ல வாழ்க்கை, மனைவி, குடும்பம், நல்ல நண்பன் என அருமையாக இருக்கும். நல்ல நண்பர்கள் துரோகியாக மாறுவதும், துரோகிகள் நல்லவராக மாறுவதற்கான வாய்ப்பையும் ராகு ஏற்படுத்தக்கூடும். ஆனால், 7 ஆம் இடத்தை தற்போது குரு பார்ப்பதால் உங்களுக்கு வரும் அனைத்துவிதமான பாதிப்புகளையும் தடுத்து நிறுத்துவார். மேலும், 7 ஆம் இடத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களிலும் உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்துவார்.
சிறு சிறு பாதிப்பு
ராகு பகவான் 7 இல் அமர்ந்து ராசியை பார்ப்பதால் மருந்தால் கண்டம், உணவே நச்சாகும் தன்மை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடல்வால்வு தொடர்பான பிரச்சனைகள், முதுகுத் தண்டுவடப் பிரச்சனைகள் போன்றவை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் குரு கடக ராசிக்கு வரும்போது, ராகு சிறு சிறு பாதிப்புகளை கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது அக்டோபர் முதல் டிசம்பர் 5 வரை பயணங்கள், உணவு முறைகள், நண்பர்கள், துணையிடம் கவனமாக இருப்பது நல்லது.
கவனம்
கேது உங்கள் ஆணவத்தை தூண்டி உங்களால் முடியும் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்துவதால், அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்நியர் தலையீட்டை குடும்பத்தில் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பேசுவதால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கை, கால்களில் ரத்த காயங்கள், நெருப்பு காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
திருமண யோகம்
ராசிக்கு 11 இல் குரு அமர்ந்து 7 ஆம் இடத்தை பார்க்கிறார். ஆனால் ராகு அங்கிருப்பதால் தொலைதூரங்களில் திருமணமாவதற்கான வாய்ப்புள்ளது. கலப்புத் திருமண யோகம் உண்டு. குரு ஒரு வருடம் இருக்கும்போது திருமண அமைப்பு ஏற்படும். ஆனால் ராகு ஒன்றரை வருடம் இருப்பதால் கடைசி 6 மாதத்தில் சில குழப்பங்கள், பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் உங்கள் சுய ஜாதகத்தில் நல்ல தசாபுத்தி நடக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டு செய்து கொள்வது நல்லது.
வேலை, வீடு
வேலை மாற்றம், வேலையில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசு வேலைக்கு படித்து முயற்சிப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உள்ளது. சனி 8 இல் இருப்பதால் கடனை வாங்கத் தூண்டுவார். ஆனால் கடன் குறையாது. வட்டி அதிகரித்துக் கொண்டே போகும்.
எச்சரிக்கை
சனி பகவான் சூரியனுக்கு பகை கிரகம் என்பதால் திடீர் விபத்துகள், கண்டம், காயங்கள், எலும்பு, எலும்பு முறிவு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications