சனி பெயர்ச்சி 2023..யாருக்கு சூப்பர்? யாருக்கு ஏழரை சனி? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
மதுரை: சனி பகவான் இன்னும் சில மாதங்களில் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.
சுபகிருது வருடம் தை மாதம் 3ஆம் தேதி ஜனவரி 17, 2023ஆம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, தனுசு தைரிய சனி என வருவதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவ்வப்போது சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.
கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி. சிம்மம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி. மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை தொடங்குகிறது. விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி, இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை சென்று வணங்கலாம் என்று பார்க்கலாம். இந்த சனிபகவான் கோவிலுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நவகிரக சனிபகவானை வணங்கி பலன் பெறலாம்.
மேஷம்
லாப சனி காலம் 100 சதவிகிதம் நன்மை உண்டாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் ஜெயமாகும். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். சிவ ஆலயம் சென்று சிவன் பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
ரிஷபம்
தொழில் சனி காலம் தொடங்கும் காலம் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.
மிதுனம்
பாக்யசனி காலம் என்பதால் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள்.
கடகம்
அஷ்டமத்து சனி ஆரம்பிக்க உள்ளது. கஷ்டங்கள் என்றாலும் கவலையை விடுங்கள். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது. திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம்.
சிம்மம்
கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். சச மகா யோகம் கை கூடி வரப்போகிறது. காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமியை வணங்கலாம். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
கன்னி
ருண ரோக சத்ரு ஸ்தான சனி அதிகபட்ச நன்மையைத் தரப்போகிறார். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
துலாம்
புண்ணிய சனி காலம் என்பதால் பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். அம்மா வழி சொத்துக்கள் கை கூடி வரும். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிகம்
அர்த்தாஷ்டம சனி என்பதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். சனி பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும். ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
தனுசு
உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது. நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். கஷ்டங்கள், கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது. பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
மகரம்
ஜென்ம சனி முடிந்து பாதசனி காலம் தொடங்கப்போகிறது. உங்கள் பயணங்களில் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது. வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமத்தில் பங்கேற்கலாம்.
கும்பம்
விரைய சனி முடிந்து ஏழரை சனியில் ஜென்மசனி காலம் தொடங்குகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. திடீர் விரைய செலவுகள் வரும். உங்களுடைய பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம்.